Monday 21 June 2021

அன்புள்ள அப்பா 🙏🏼

 




அப்பா என்றதும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? அப்பா-மகள் உறவு சற்று ஆழமானது... வித்யாச
மான பாசம் கொண்டது!  இந்த வார்த்தையை சொல்லும்
போதே மனம் சிலிர்க்
கிறது..கண்கள் குளமாகிறது..!

முதல் குழந்தை பெண்தான் வேண்டும் என்று என் அப்பா ஆசைப்பட்டு பிறந்தவளாம் நான் என்று என் அம்மா சொல்வார். எனக்கு கீழே மூன்று தம்பிகள் இருந்தாலும் என் மீது ஒரு தனி பாசம் என் அப்பாவுக்கு என்பதை நான் பலமுறை உணர்ந்ததுண்டு.

என் இரண்டு வயதிலிருந்தே மாலையில்  அலுவலகத்தி
லிருந்து அப்பா எப்பொழுது வருவார் என்று வாசலிலேயே காத்திருப்பேனாம். அப்பாவும் பிஸ்கட் சாக்லேட் என்று ஏதாவது வாங்கி வருவாராம். அப்பா வந்ததும் அன்று நடந்ததெல்லாம் அவரிடம் சொல்லிவிட்டே அவரை உடை மாற்ற விடுவேனாம்! நான்கு வயது வரை வெளியில் சென்றால் அப்பாவை என்னைத் தூக்கி வரச் சொல்லி அடம் செய்வேனாம்!

நான் படிக்கும் நாட்களில் எனக்கு கணக்கில் சந்தேகம் வந்தால்(எனக்கு கணக்கு வராத பாடம்!) பொறுமையாக சொல்லித் தருவார். எனக்கு கல்லூரி சென்று படிக்க ஆசை இருந்தும் அப்பாவிற்கு இஷ்டமில்லாததால் அனுப்ப வில்லை. நானும் அதைப் பொருட்படுத்தவில்லை.

எனக்கு பத்தொன்பது வயதில் திருமணம் முடிப்பதில் அப்பா உறுதியாக இருந்தார். நான் திருச்சியிலும் என் பெற்றோர் முசிறியிலும் இருந்ததால் அடிக்கடி பெற்றோரைப் பார்க்கலாம் என்ற ஆசையில் இருந்தேன்.ஆனால் சில மாதங்களிலேயே உத்திர பிரதேசத்தில் மதுராவுக்கு மாறிப் போன போது ரயில் நிலையத்தில் என் அப்பா கண்கள் கலங்க நின்றது இன்னும் என் மனதில் நிற்கிறது. இனி நினைத்தால் பெண்ணை பார்க்க முடியாதே என்று அம்மாவிடம் சொல்லி வருத்தப் பட்டாராம்.

என் அப்பா கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ளா விட்டாலும் எல்லா பாட்டுகளும் பாடுவார். ராகம் தாளம் எல்லாம் தெரியும். ராக ஆலாபனை செய்து என்னைப் பாடச் சொல்லி கேட்பார். நான் பாடகியாக வேண்டும் என்ற ஆசை என் அப்பாவுக்கு உண்டு. அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.

சிறு வயதில் அவர் என் கைபிடித்து பள்ளி அழைத்துச் சென்றது, எனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தது, நான் படிப்பில் சிறப்புப் பெற்றபோது பெருமிதப் பட்டது, என்னைப் பாடச் சொல்லி ரசித்தது, எனக்கு குழந்தைகள் பிறந்தபோது ஒரு தாத்தாவாக சந்தோஷப் பட்டது, அவர்களின் படிப்பு,திருமணம் இவற்றை பாசத்தோடு ரசித்து அனுபவித்து பாராட்டி வாழ்த்தியது, கொள்ளுப் பேரன் பேத்திகளுடனும் விளையாடி மகிழ்ந்தது, என் சஷ்டி அப்த பூர்த்திக்கு வந்து வாழ்த்தியது... என்று அவரின் பாசத்துக்கு சான்றாக எத்தனை விஷயங்கள்!

நான் அப்பாவைப் பார்க்க போகிறேன் என்றால் என் தம்பியிடம் 'ரயில் எப்ப வரும்? ஸ்டேஷனுக்கு போகலியா?' என்று பத்து முறை கேட்பார் என்று என் தம்பி பரிகசிப்பான்!
நான் சென்றாலே அவருக்கு ஒரு சந்தோஷம். பழைய கதையெல்லாம் சொல்லுவார். 'இன்னும் பத்து நாள் இருந்துட்டு போ' என்பார். 'உன் மாப்பிள்ளைக்கு சமைத்து போடணுமே' என்றால் அவரையும் அழைத்து வந்து விடு என்பார்! இருவருமே வங்கியில் பணி புரிந்ததால் என் கணவருடன் அலுக்காமல் வங்கி விஷயங்களைப் பற்றிப் பேசுவார்!

அவருக்கு பிடித்த சமையலை செய்து போடுவேன். மோர்க்களி, புளிப்பொங்கல், அரிசி நொய் உப்மா, மெதுவடை எல்லாம் என் அப்பாவுக்கு பிடித்தவை. மாம்பழ சீசனில் என் கணவர் எல்லா வகை மாம்பழமும் வாங்குவார். தினமும் மாம்பழம் சாப்பிட்டு விட்டு சர்க்கரை ஏறிவிட்டதா என்று டெஸ்ட் பண்ணுவார்!

நான் 2013 டிசம்பரில் ஜெர்மனிக்கு என் பிள்ளை வீட்டுக்கு என் மருமகள் பிரசவத்திற்காக சென்றிருந்தபோது என் அப்பாவுக்கு மூச்சு விட முடியாமல் வெண்டிலேட்டரில் இருப்பதாக ராஜமுந்திரியில் இருந்த என் தம்பி சொன்ன
போது எனக்கு என்ன செய்வ
தென்று தெரியவில்லை. ஏதாவது ஆகிவிட்டால் அப்பாவைப் பார்க்கக்கூட முடியாதே என்று கடவுளிடம் எதுவும் ஆகாமல் இருக்க
வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். நல்ல வேளையாக இரண்டு நாளில் சரியாகி வீடு வந்து விட்டார் என்றபோதுதான் நிம்மதி
யாயிற்று.

திரும்பி பிப்ரவரியில் வந்ததும் மறுநாளே கிளம்பி தம்பி வீட்டுக்கு ராஜமுந்திரி
சென்றோம். அப்பா சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தார். ..என்னப்பா இப்படி வெண்டிலேட்டர்க்
கல்லாம் போய் பயமுறுத்
திட்டியே...என்றபோது,..அதைவிடு.அது முடிஞ்ச கதை. நீ லண்டன்லாம் பார்த்தியா? லண்டன் ரொம்ப அழகான நகரமாமே? ராணியைப் பார்த்தியா?...என்றெல்லாம் ஆர்வமாகக் கேட்டார்.

..ஏப்ரலில் திருச்சி வந்துவிடு. டிக்கெட் வாங்குகிறேன்..
என்றபோது..கண்டிப்பா வரேன். தாத்தாச்சாரி கடை மாம்பழம் சாப்பிடணும்..
என்றவருக்கு மார்ச் மாதம் மீண்டும் மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக தம்பி சொன்னதும் மறுநாளே கிளம்பிச் சென்றோம்.

22 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தவர் உடல்நிலை மோசமாகி ICUவில் இருந்தபோது அசைவே இல்லை. ஏப்ரல் 5ம்தேதி காலை எங்கள் திருமண
நாளானதால் நானும் என் கணவரும் கோயிலுக்கு சென்று விட்டு அப்பாவைப் பார்த்து வர ஆஸ்பத்திரி போனபோது டாக்டர்..நிலைமை மோசமாகி விட்டது..என்று சொன்னார். எனக்கு அழுகை வந்துவிட்டது.

என்னைத் தாலாட்டி சீராட்டி பாராட்டி வளர்த்து திருமணத்தின்போது கண்கலங்கிய அப்பா இப்படி கண் திறக்காமல் இருக்கிறாரே என்ற வருத்தத்தில் அவரைத் தொட்டு அப்பா..அப்பா என்று கூப்பிட்டதும் சடாரென்று திரும்பி சில நிமிடம் என்னைப் பார்த்தவர் அப்படியே கண்ணை மூடிக் கொண்டார்.

அன்று மதியம் மறைந்து
விட்டார் என்ற செய்தி வந்தபோது கதறி விட்டேன். அவருடன் இருந்து அவருக்கு பணிவிடை செய்தது என்னால் மறக்க முடியாத நாட்கள். இறப்பதற்கு இரண்டு நாள் முன்புவரை என்னுடன் பழங்கதையெல்லாம் பேசியவர் போய்விடுவார் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. இன்று அப்பா என்னுடன் இல்லை என்றாலும் அவரின் ஆசிகள் என்னை இன்றும் சிறப்பாக  வாழவைப்பதை உணர்கிறேன்.

அப்பா ஒரு சம்பவம் அல்ல...ஒரு சரித்திரம்!
அப்பாவின் அன்பு சிறுதுளி அல்ல..பெரும் சமுத்திரம்!

அப்பா..உங்கள் அன்பு
கடல் போன்றது..
வெளியே தெரியாது
ஆனால் ஆழம் அதிகம்.

அப்பா..உங்களுக்கும்,
 கடவுளுக்கும்
சின்ன வேறுபாடு தான்
கண்ணுக்கு தெரியாதவர்
கடவுள். எனக்கு கடவுளாய் இருந்தவர் நீங்கள்!

உங்கள் தோள்கள் எனக்கு ஒரு காலத்தில் விலை மதிப்பற்ற சிம்மாசனம்..உங்கள் மடி விலை உயர்ந்த பட்டு மெத்தை!

அப்பா..உங்கள் அன்பை மிஞ்சும் அளவு வேறு எந்த
அன்பும் இந்த உலகில்
இல்லை!

அப்பா..உங்களை வணங்குகிறேன்🙏🏼
என்றும் உங்கள் ஆசியை வேண்டுகிறேன்🙏🏼
என்றும் எனக்கு துணையாக இருக்க இறைஞ்சுகிறேன்🙏🏼

Saturday 5 June 2021

எனக்கு பிடித்த திரைப்படம்

 


எனக்கு பிடித்த திரைப்படம்


DDLJ...தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே (ஹிந்தி)


1995 ஆம் ஆண்டு ஆதித்யா சோப்ரா என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவான தில்வாலே துல்ஹனியா லேஜாயங்கே  ஷாருக்கானும் கஜோலும் நடித்த இந்தி திரைப்படம்.  ஷாருக்கான், ராஜ்  என்ற கேரக்டரிலும் கஜோல், சிம்ரன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். அவர்கள் மட்டுமே பிரதானமாக நடித்த காதலை மையமாக வைத்து எடுத்த படம். அவர்கள் அதில் நடித்த மாதிரியே தெரியாது..அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறி விட்டது போலத் தோன்றும்!


படமும் பாடல்களும் மிகப் பிரபலமாயிற்று. வட நாடுகளில் மட்டுமன்றி இந்தி தெரியாத மாநிலங்களிலும் வசூலை அள்ளிய படம். 

திரைப்படம் வெளியாகி 21 வருடங்கள் மும்பையில் உள்ள மராத்தா மந்திர் என்ற திரையரங்கில் ஓடியது. 


குடும்பப் பாங்கான காதல் கதை. இதன் பாடல்கள் இந்தி தெரியாதவர்களையும் தாளம் போட வைத்து ரசிக்க வைக்கும். ஆதித்யா சோப்ரா இயக்குநராக அறிமுகமான இப்படம் வெறும் 4 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு 102.50 கோடி ரூபாயை வசூலித்தது.இந்தத் திரைப்படம் இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. 


இந்தப் படத்துக்குப் பிறகு ஷாரூக் கான் - கஜோல் இணை, பாலிவுட்டின் பிரபலமான திரை ஜோடிகளில் ஒன்றாக மாறியது. இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்தனர்.


‘டிடிஎல்ஜே’ (DDLJ) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் திரைப்படத்தில்

ஆண் பெண் என இரண்டு என்.ஆர்.ஐ இந்தியர்கள்.. ஒருவர் ஐரோப்பிய வாழ்க்கை முறையை விரும்பும் அல்ட்ரா மாடர்ன் இளைஞர், அந்தப் பெண்ணோ தாம் விரும்பும் ஒருவரை இந்திய கலாச்சாரத்தோடு இணைந்தவரை திருமணம் செய்து கொள்ளவிரும்புகிறார், 


இரன்டு பேரும் ஒரு பெரிய ரயில் பயணத்தில் தனியாக பயணிக்கும் கட்டாயம். அதன் பின் என்ன ஆகிறது என்பது கதை. தம்மையறியாமலே இருவரும் காதலித்து கடைசியில் இருவரும் இணையும் வரை நடக்கும் சுவையான சம்பவங்களே திரைக்கதை!


இந்தப் படத்தை பார்த்தபோது உண்மையிலேயே இருவரின் நடிப்பும் மனதைத் தொட்டது. தமக்குள் காதல் இருப்பதை அறியாமலே இருவரும் பேசிக் கொள்வதும் கோபித்துக் கொள்வதும் ஒரு இயல்பான இருவருக்கிடையில் இருக்கும் குணத்தையே காட்டும். 


இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்ததோடு வீட்டிலும் பலமுறை போட்டுப் பார்த்திருக்கிறோம். கஜோலின் அழகு குறைவாக இருந்தாலும் அவர் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். டீன்ஏஜில் இருந்த என் பெண் பிள்ளைகள் நான்கைந்து முறை தியேட்டருக்கு சென்று அந்தப் படத்தைப் பார்த்தார்கள்!


அந்தப் படத்தில் ஐரோப்பாவின் அழகிய இடங்களும் ரயில் பயணங்களும் மிக அருமையாகப் படமாக்கப் பட்டிருக்கும். நான் பத்து வருடம் கழித்து ஐரோப்பா சென்றபோது கஜோலும் ஷாருக்கும் இறங்கிய அந்த ஸ்டேஷனை என் பிள்ளை அழைத்துச் சென்று காட்டினான். அவ்வளவு தூரம் என்னைக் கவர்ந்த படம் அது!


Friday 4 June 2021

எனக்கு பிடித்த ஃபோட்டோ..

 




நம் குழந்தைகள் பிறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட நம் பேரன் பேத்திகள் பிறந்ததும் அவர்களைத் தூக்கிக் கொஞ்சும் மகிழ்ச்சிக்கு ஈடிணை கிடையாது. 


என் பெண் வயிற்றுப் பேரன் மும்பையில் பிறந்தபோது அவனை முதலில் தூக்கியவள் நான்தான்! அந்த மகிழ்ச்சிக்கு ஈடிணையேது? இன்றும் பாட்டி பாடாடி என்று சுற்றி வருவான். நான் செய்யும் ரசம், மைசூர்பாகு அவனுக்கு மிகவும் பிடிக்கும்.


அவன் பிறந்த நான்கு நாளில் எடுத்த புகைப்படமும், இன்று பதினைந்து வயதில் அவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் எனக்கு மிகப் பிடித்தவை!


ராதாபாலு

Saturday 29 May 2021

இன்று உலக தம்பதியர் தினம்..💞💕💏

 


இன்று உலக தம்பதியர் தினம்..💞💕💏


ஒருவராய்ப் பிறந்தோம்..

இருவராய் இணைந்தோம்..

இதயத்தால் கலந்தோம்..


ஒருவருக்கொருவர் 

விட்டுக் கொடுத்து 

மனதால் இணைந்து

சின்னச் சின்ன சந்தோஷங்களையும் இணைந்து ரசித்து..


எத்தனை கஷ்டம் 

வந்தாலும் அதனை 

எதிர்நோக்கி 

வெற்றி கண்டு...


ஆசை அன்பு

நேசம் பாசம்

அனைத்திலும்

இணை பிரியாமல்..


இன்றுபோல் என்றும் இனிமையாய் வாழ

இதயம் கனிந்த 

தம்பதியர் தின நல்வாழ்த்துக்கள்!



Thursday 27 May 2021

என் வாழ்க்கை இலக்கு




நாம் பிறந்து வளரும்போது நம் வாழ்க்கையின் இலக்கு பற்றியெல்லாம் யோசிப்ப

தில்லை. நமக்கு எல்லா வசதிகளும் செய்ய நம் பெற்றோர் இருக்கிறார்கள் என்ற நிம்மதி. நானும் அப்படித்தான் படித்து முடித்தேன். கல்லூரிப் படிப்பு தேவையில்லை என்ற என் பெற்றோரின் முடிவுக்கு கட்டுப்பட்டு 18 வயதில் திருமணம். 


அப்பொழுதெல்லாம் மணியனின் பயணக் கட்டுரைகளைப் படித்து பாரிஸையும், சுவிஸ்ஸையும், லண்டனையும் வாழ்வில் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. அதெல்லாம் நடக்காது என்று மனது சொல்லும். அப்பொழு

தெல்லாம் மும்பை டில்லிக் காரர்களையே 'ஆ' வென்று வாய் பிளந்து பார்ப்போம். நான் படித்து வளர்ந்தது சென்னை

யானாலும் என் அப்பா வங்கி

யில் பிறகு சிறிய ஊர்களுக்கு மாறுதல்.என்னையே ..மெட்ராஸ் எப்படிங்க இருக்கும்? ஊருக்குள்ளயே கடல் இருக்குமாமே..என்றெல்லாம் கேட்டவர்கள் உண்டு!


என் கணவருக்கு மதுரா மாற்றல் ஆக... நீ டில்லி, ஆக்ரா தாஜ்மஹால் எல்லாம் பார்க்கலாம்...என்றார்கள். அங்கு டில்லி, ஆக்ரா, வாரணாசி, ஜெய்ப்பூர், உதய்பூர், ஹரித்வார், ரிஷிகேஷ் எல்லாம் பார்த்தபின் மீண்டும் தமிழகத்தில் பாபநாசம் (குடந்தை அருகில்) கிராமத்துக்கு மாற்றல்! 


அப்பொழுது என் இலக்கு பெண் பிள்ளைகளின் படிப்பு. அவர்களை சிறந்த படிப்பு படித்து வாழ்வில் ஒரு உயர்நிலையை அடைய வைக்க வேண்டும் என்று ஊக்கம் கொடுத்தேன். யாராவது ஒருவராவது மாநில முதலாக வரவேண்டும் என்பது  என் ஆசை. அங்கிருந்து குடந்தை, ஈரோடு, மதுரை என்று பல ஊர் பள்ளிகளில் படித்தாலும் என் மூத்தமகன் மாநில மூன்றாமிடமும் இரண்டாம் மகன் மாநில முதலிடமும் பெற்றதில் மகிழ்ச்சியடைந்தேன்.


எனக்கு மருத்துவர்களைப் பார்க்கும்போது தெய்வமாகத் தோன்றும். என் பிள்ளைகளுக்கு மருத்துவப் படிப்பில் ஆர்வமில்லாததால் என் பெண்ணை மருத்துவ

ராக்க விரும்பினேன். அவளுக்கும் ஆர்வம் இருந்து முனைந்து படித்து மருத்துவ

ரானாள்.  கடைசி மகன் இன்ஜினியர். IIT, IIMல் யாரும் படிக்கவில்லை என்ற என் ஆசை நிறைவேறியது என் கடைக்குட்டி மகனால்.  மும்பை IITயில் M.Tech படித்து லண்டனில் பணிபுரிகிறான்.


என் மூத்த மகன் பொறியியலில் மூன்று Ph.Dக்கள் பெற்று ஜெர்மனியில் பணி புரிகிறான். இரண்டாம் மகன் IIMல் இடம் கிடைக்காததால் XIMபுவனேஸ்வரில் MBA படித்து சொந்தத் தொழில் செய்கிறான்.குழந்தைகளுக்கு திருமணமாகி நவரத்தி

னங்களாய் பேரன் பேத்திகள். 


என் மகன் ஜெர்மனியில் இருப்பதால் என் பாரிஸ், சுவிஸ் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 2005ம் ஆண்டு முதல் விமானப் பயணம்! முதல் வெளிநாட்டு பயணம்! என் ஆசை நிறைவேறியது. பாரிஸின் ஈஃபில் டவரையும், சுவிஸ்ஸின் ஆல்ப்ஸ் மலையையும் கண்விரியப் பார்த்து மகிழ்ந்தேன். ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் நடந்து மகிழ்ந்தேன்! நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அழகிய நகரமான லண்டன் சென்று வந்தோம்! என் இலக்கு நிறைவேறியது! அத்துடன் என் லிஸ்ட்டில் இல்லாத பல நாடுகளும் பார்த்தாச்சு! 


காசி யாத்திரை, சார்தாம் யாத்திரை இன்னும் பல முக்கிய ஆலயங்களின் தரிசனத்தில் மெய்சிலிர்த்

தோம். ஸ்ரீ சத்ய சாய் பாபா என் குரு. புட்டபர்த்திக்கு பலமுறை தரிசனத்துக்கு சென்றிருக்

கிறேன். ஒருமுறை அங்கு சர்வீஸ் செய்ய அருள் செய்ய அவரை வேண்டினேன். சாயி பக்தையான என் தோழி அதற்கான முறைகளை செய்து என்னை சர்வீஸுக்கு அழைத்துச் சென்றாள். அதிர்ஷ்டவசமாக அங்கு சுவாமி வந்து அமர்ந்து தரிசனம் தரும் இடத்தை சுத்தம் செய்து துடைத்து பக்தர்களின் வரிசையை சரிசெய்யும் பணி. எட்டு நாட்கள் சுவாமி முன்னால் அமர்ந்து தரிசிக்கும் அற்புத பாக்யம். இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்க

வைக்கும் அனுபவம்.


எல்லா கடமைகளையும் முடித்த நிலையில் அடுத்து அழகிய தூணும் திண்ணையுமாக, தோட்டத்தில் காய்கறி பூச்செடிகளும், தென்னையும், வேப்ப மரமும் இரு பக்கம் நின்றிருக்க காவிரிக் கரையில் கிராமிய அமைப்பில் இன்றைய வசதிகளோடு ஒரு வீடு வாங்கும் ஆசையும் சமீபத்தில் நிறைவேறியது. 


என் வாழ்க்கைக்கான இலக்குகளை என்னுள் உருவாக்கிய இறைவனே அவற்றை நிறைவேற்றியும் வைத்துள்ளான் என்றே நான் நம்புகிறேன். என்றும் இறைசிந்தனையும், எல்லாம் அவனே என்ற ஆத்ம சமர்ப்பணமும் கொண்டு அவன்தாள் பணிந்து எவருக்கும் கஷ்டம் தராமல் அவன் இணையடி அடைய வேண்டும் என்பதே எங்கள் இறுதி இலக்கு🙏



Wednesday 5 May 2021

மத்யமர்_குறுங்கதை



உணர்வுகள்

காவேரியும் குமாரசாமியும் மிகவும் அந்நியோன்ய தம்பதிகள்.  அவள் கணவர் குமாரசாமி விவசாயி. நிறைய நிலங்கள் இருந்தது. உணவுக்கு பஞ்சமில்லாத வாழ்வு. சொந்தமாக ஒரு சிறிய வீடு. ஒரே பிள்ளை சுகுமார். 


அவனுக்கு சிறுவயது முதலே பிடிவாதம், கோபம் எல்லாம் உண்டு. அவன் சகவாசம் சரியில்லை. காவேரியும், குமாரசாமியும் எவ்வளவோ புத்திமதி  சொல்லியும் அவன் திருந்துவதாக இல்லை. பத்தாம் வகுப்புவரை தட்டுத் தடுமாறி தேறியவன் எப்போதும் கண்டவர்களுடன் ஊர் சுற்றுவது, சிகரெட், மது என்று பொழுதைக் கழித்தான்.


வேலைக்குப் போக வேண்டிய வயதில் வீண் பொழுது போக்கி யதோடு விலை உயர்வான உடைகள், பைக் இவற்றை வீட்டில் பிடிவாதம் செய்து வாங்கி ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு ஊரை சுற்றிக் கொண்டிருந்தான். விவசாயத்தில் அவனுக்கு சிறிதும் நாட்டமில்லை.


குமாரசாமிக்கு மகனைப் பற்றிய கவலையில் காச நோய் வந்து  உடல்நிலை மோசமாகியது. காவேரி மகனிடம் வேலைக்கு செல்லாவிட்டாலும் விவசாயம் பார்த்துக் கொள்ளும்படி கெஞ்சினாள். அவனோ எதைப் பற்றியும் கவலையின்றி ஊதாரியாகத் திரிந்தான். 


குமாரசாமி காவேரியிடம் "காவேரி பூமிதான் நமக்கு தாய். விவசாயம்தான் நம் தொழில். ஒரு காணி நிலமாவது நமக்கு சொந்தமா இருக்கணும். நம்ம பிள்ளை ஒருநாள் மனசு மாறி வந்து அதை வெச்சு விவசாயம் செய்யணும். இதான் என் ஆசை" என்றார்.


குமாரசாமியின் உடல்நிலை மோசமாக, வழியின்றி நிலத்தை விற்று வைத்தியம் செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்ததைக் கேட்டும் குடிபோதையில் இருந்த சுகுமாரை நான்குபேர் பிடித்து அழைத்து வந்து கொள்ளி போடவைத்து காரியம் செய்தார்கள்.


போதை தீர்ந்ததும் இனி சொத்துக்கள் தனக்குதான் என்பதால் சுகுமார் தன் தாயைத்  துன்புறுத்தி மீதமிருந்த நிலங்களை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டவன் எல்லாவற்

றையும் விற்று பணத்துடன் சிங்கப்பூருக்கு  செல்வதாகக் கூறிவிட்டு சென்றுவிட்டான். காவேரி எவ்வளவோ அழுதும், கெஞ்சியும் அவனைத்  தடுக்க முடியவில்லை. 


அவர்கள் வீட்டை நல்ல வேளையாக விற்காததால் காவேரி அதைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டாள். வீட்டை சுத்தம் செய்தபோது குமாரசாமியின் பெட்டியில் ஒரு பத்திரம் கிடைத்தது. அதை தெரிந்த  நண்பரிடம் காட்டி என்னவென்று கேட்டாள். அவர் அது ஒரு நிலப் பத்திரம் என்றும், குமாரசாமி இறப்பதற்கு சில நாட்கள் முன்பு  இரண்டு  ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாகவும் அது இருக்கும் இடத்தையும் சொன்னார்.


அங்கு சென்று பார்த்தவளுக்கு தன் கணவர் செய்த காரியத்தை நினைத்து கண்கலங்கியது. மகனுக்கு தெரிந்தால் இதையும் விற்றுவிடுவான் என்று சொல்லாமல் இருந்திருக்

கிறாரென்று புரிந்தது. ஆற்றுக்கு அருகிலிருந்த அந்த நிலத்தில் விவசாயம் செய்தால் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து பலன் தரும். ஆனால் தன்னால் முடியாது என்பதால் நம்பிக்கையானவர்களிடம் குத்தகைக்கு கொடுத்தாள். 


தன்னிடமிருந்த பணத்தை வைத்து வாசலில் ஒரு சிறிய பெட்டிக்கடை வைத்தாள். காலை நேரங்களில் இட்லிக்கடை வியாபாரம் நன்றாக நடந்தது. இந்த வருமானம் அவளுக்கு போதுமானதாக இருந்தது.


தன் கணவர் நினைவு வரும் நேரங்களில் அவர் எப்போதும் அமர்ந்திருக்கும் சாய்வு நாற்காலி அருகில் அமர்ந்து தன் உணர்ச்சிகளை, எண்ணங்களை அவரிடம் பேசுவதாக நினைத்து சொல்வாள். மனம் ஆறுதலடைவது போல் உணர்வாள்.


நாட்கள் ஓடின. வயது எழுபதானாலும், மகன் என்றாவது ஒருநாள் வருவான் என்ற நம்பிக்கையில் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறாள் காவேரி


Saturday 24 April 2021

வீல்..Sunday_special





Sunday_special

வீல்..

நமக்கு பயம் வரும்போது, திடுக்கிடும் நிழ்ச்சிகள் நடக்கும்போது, இருட்டு நேரத்தில் எதையாவது எதிர்பாராமல் பார்க்கும்போது நம்மை அறியாமல் வீல் என்று கத்திவிடுவோம்.


எனக்கு பத்து வயதிருக்கும். எனக்கு கரப்பான்பூச்சியைக் கண்டால் மிகவும் பயம். அதுவும் பறக்கும் கரப்பான்பூச்சி என்றால் நான் பயந்து ஓட, அது என் பக்கமே பறந்து வர நான் வீல்வீலென்று கத்துவதைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் வந்து விடுவார்கள்! நெஞ்சு  படபடவென்று அடித்துக் கொள்ளும். அது என்னமோ கரப்பான் பூச்சிக்கு அப்படி என்ன கோபமோ என்னிடத்தில், என்னிடம் மட்டுமே வந்து பமுறுத்தும்!! என் அம்மா, தம்பிகள் அதன் மீசையைப் பிடித்து தூக்கி எறிவார்கள்!


எங்கள் வீட்டில் அப்பொழுதுதான் டேபிள்ஃபேன் புதிதாக வாங்கியிருந்தார்கள். இரண்டு அறைகளுக்கு நடுவில் ஃபேனை Oscillationல் வைத்துவிட்டு  இரண்டு அறையிலுமாக நாங்கள் படுத்து உறங்குவோம்.


அன்று இரவு நான் படுக்க செல்லும்போது ஒரு கரப்பான்பூச்சி 'விர்'ரென்று பறந்து வந்து சரியாக என்மேல் உட்கார, நான் பதறியபடி 'வீல்' என்று கத்திக் கொண்டே ஃபேன் பக்கம் ஓட...நான் அதில் இடித்து அது கீழே விழுந்து மேலிருந்த மூடி தனியாகக் கீழே விழ...என் எண்ணம் முழுதும் கரப்பான்பூச்சி மேலேதான்! 


என் தம்பிகளோ..வாங்கி நாலு நாள் கூட ஆகல. புது ஃபேனை உடைச்சுட்டியே..என என்மேல் பாய, என் அம்மாவும் அப்பாவும்..இத்தனூண்டு கரப்பான்பூச்சி என்ன பண்ணிடும்னு இந்தப் பாடு படுத்தற..என்று கோபிக்க, அந்த கரப்பான்பூச்சி பயம் இன்னமும் அப்படியேதான்! ஆனால் இந்த சம்பவம் பற்றி நினைக்கும்போது இன்றும் அந்த பதட்டம் மனதிலேயே நிற்கிறது.


அடுத்த 'வீல்' என்னை மட்டுமன்றி என் வீட்டினரையே பயமுறுத்திய என் பேரனின் அலறல்! என் மகள் வயிற்று பேரன் எங்கள் வீட்டில் பிறந்தான். ஒருமாதம் ரொம்ப சமத்தாக இருந்தான். குளிக்கும்போது கூட அழுததில்லை. ரொம்ப சமத்து என்று எல்லோரும் சந்தோஷப் பட்டோம். ஒரு மாதத்திற்கு பின் சரியாக மாலை ஆறு மணிக்கு 'வீல்வீல்' என்று அழ ஆரம்பித்தால் அடுத்த வீட்டு மனிதர்களெல்லாம் 'என்ன ஆச்சு' என்று கேட்டு வந்து விடுவார்கள்! 


யார் கையிலும் எந்த சமாதானம் செய்தாலும் நிறுத்த மாட்டான். எதுவும் சாப்பிடவும் மாட்டான். குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கும். மூச்சு விடாமல் அரைமணி நேரம் அழுதுவிட்டு விளையாட ஆரம்பித்து விடுவான்! டாக்டரிடம் கேட்டபோது..சில குழந்தைகள் வெளி சூழ்நிலைக்கு அட்ஜஸ்ட் ஆகும்வரை அப்படி அழுவதுண்டு. கொஞ்ச நாளில் சரியாகி விடும்...என்றார். கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு அந்த 'வீல்' தொடர்ந்தது. இப்பவும் அதைச் சொல்லி நாங்கள் அவனைக் கலாய்ப்போம்!


ஙே..அனுபவம்

 



Sunday_special

'ஙே'😳😮

'ஙே'நேரங்களை யோசித்து யோசித்து ஆறு நாளாக எழுதாமல் இருந்து விட்டது நினைவு வர, 'அட..இது மறந்து போச்சே' என்று நான் 'ஙே' என்று அசடு வழிந்த நேரத்தை எழுதுகிறேன்!

சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் என் தம்பி குடும்பத்துடன் மகாபலேஷ்வர் சென்றிருந்தோம். அது மகாராஷ்டிராவின் மிகச் சிறந்த மலைவாசஸ்தலங்களில் ஒன்று. அங்கு நிறைய பாயிண்டுகள் உண்டு. ஒவ்வொன்றும் தனி அழகு. ஒன்று உயரமாக ஏறிச் செல்ல வேண்டும். அடுத்தது சரசரவென்று கீழே இறங்கும். ஒன்றில் மேகங்களைத் தொடலாம்..ஒன்றில் அதல பாதாளத்தை பார்த்து மகிழலாம்!

நாங்கள் சென்ற நேரம் அதிக கூட்டமில்லை. ஒரு உயரமான பாயிண்டில் ஏறிச் சென்றோம். அங்கு எவரையும் காணோம். 'இது ரொம்ப உயரத்தால் யாரும் வரமாட்டார்களோ' என்றபடி ஏறினோம். எங்கள் எதிரில் ஒரு இளவயது ஜோடி மிக நெருக்கமாக பேசிக் கொண்டு இறங்கி வந்தார்கள். அவர்களைப் பார்த்த என் தம்பியும் பிள்ளைகளும் 'ஹனிமூன் ஜோடியோ? மேல கூட்டம் இருக்குனு இறங்கி வந்து விட்டார்களோ'என்றபடி ஏதோ A கமெண்ட் அடித்தபடி வந்தார்கள்! நாங்கள் அங்கிருப்போருக்கு தமிழ் தெரியாது என்பதால் தமிழில் கிண்டல், கேலி செய்து பேசுவதுண்டு!

நாங்கள் மேலே சென்று பார்த்தபோது ஒருவரும் இல்லை. 'ஓ..யாருமில்லாத
தால்தான் அந்த ஜோடி தனியா என்ஜாய் பண்ணிட்டு போயிருக்காங்க' என்று பேசிக்கொண்டு நாங்கள் சிரிக்க...அந்த ஜோடி மேலே ஏறி வந்தார்கள்.

அந்த இளைஞன் என் தம்பியிடம்...சார் இங்க யாரும் இல்லாததால பயந்து நாங்க கீழ வந்தோம். இப்போ நீங்க வந்ததால மறுபடி வந்தோம். ரொம்ப சூப்பரா இருக்கு இந்த இடம்...என்று சொல்ல நாங்கள் அனைவரும் 'ஙே'😮😳

அச்சச்சோ..இவருக்கு தமிழ் தெரியுமோ? நாங்கள் பேசியதைக் கேட்டு என்ன நினைத்திருப்பார்களோ என்று நாங்கள் பதில் சொல்லக் கூட முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஙே என்று அசடு வழிய...நீங்க சென்னையா சார்...என்று அவர் கேட்க, சுதாரித்துக் கொண்டு பேசினோம்!

அதுமுதல்  தமிழ் தெரியாது என்று யார் முன்னாலும் எதுவும் பேசி 'ஙே' ஆகக் கூடாது என்று புரிந்து கொண்டேன்!

Tuesday 23 March 2021

மகளிர்_தினம்(8.3.'21)


 உலக மகளிர் தினம் ( International Women's Day). ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.


உலக மகளிர் தினம் ( International Women's Day). ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்துவதற்காக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

18 ம் நூற்றாண்டில் அமெரிக்காவில்  பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தனர்.  பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட மறுக்கப்பட்டது.

1857 ம் ஆண்டு முதல் பெண்கள் தொழிற்சாலைகள் ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தும் ஊதியம் மிகக் குறைவாகவே தந்ததால்
பெண்கள் மிகுந்த வருத்தமடைந்து, ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர்.  அமெரிக்க அரசு இதற்கு செவி சாய்க்காததால் பெண் தொழிலாளர்கள் 1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்ட மாநாட்டில்  ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட விரும்பியும் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.

1920 ல் ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.
இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடபட்டு வருகிறது. 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.
பலநாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

நம் வாழ்வில் பெண்களைக் கொண்டாடி, உலகிற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் நாள் இது. அதே நேரத்தில், சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கம் பாலின சமத்துவம்.

சமமான பகிர்வு என்பதை தாண்டி இந்த உலகில் எல்லாவற்றையும் சமத்துவமாக மாற்றுவதற்கு அனைவருக்கும் தேவையான பகிர்வை கொடுக்க வேண்டும் என்பதே இதன் பின்னணி. அந்த வகையில் இந்த உலகை நீடித்து கொண்டு செல்வதற்கு ஆண்களையும் விட அதிமாக உழைக்கும் பெண்களுக்கு மரியாதையான அன்பான வார்த்தைகளால் வாழ்த்துக்களை கூறுவோம்!

இந்த ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் கருப்பொருள் "DigitALL: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம் ஆகும். இந்த கருப்பொருள், தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் கல்விக்கு பெண்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரித்து கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெண்கள் தமக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.. பெண் உரிமைகளை வலியுறுத்தும் நாள் இது …ஆணுக்குப் பெண்ணிங்கே சரிநிகர் சமானம் என்ற பாரதி வாக்கை  உண்மையாக்க மாற்றம் நம்மிடமிருந்து உருவாகட்டும்!

அனைத்து மகளிருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

மறதி..வரமா சாபமா?

 #Sunday_special

மறதி..வரமா சாபமா?

இந்த வார மத்யமர் பதிவுக்கான தலைப்பு என்ன?? ஹி..ஹி..மறந்தே போச்சே! எத்தனையோ யோசித்தும் நினைவு வராமல் போக, சங்கர்சாரின் பதிவைத் தேடி எடுத்து பார்த்தால் அவரே பதிவு போட மறந்து மறுநாள் போட்ட தலைப்பு..மறதி!

மறதிக்கும் எனக்கும் ரொம்...ப உறவாச்சே! ஐந்து நிமிஷத்துக்கு முன்பு வைத்தது கூட அடுத்த நிமிஷம் மறந்து விடும் மறதிசிகாமணியாச்சே நான்😄 

கேஸில் பாலை வைத்துவிட்டு அடுத்த வேலைக்குப் போய் மறந்துபோய், திரும்ப வந்து தீய்ந்த பாத்திரத்தை கைவலிக்க தேய்த்த கதை நிறைய!  சிலசமயம் நினைவு வந்து ஓடிவர, மேடை முழுதும் பாலாறாக ஓடிக் கொண்டிருக்கும்! 

இப்பொழுதெல்லாம் பாலை இன்டக்ஷன் ஸ்டவ்வில் நேரம் set செய்து விடுவதால் பால் பொங்குவதில்லை! இப்பவும் அப்பப்ப காஃபிக்கு பாலை வைத்து விட்டு அது பொங்கி வழிவது சர்வசாதாரணம்!!

ஒருநாள் ஈயச் சொம்பில் ரசத்தை வைத்ததை மறந்து வேறுவேலையாகப் போய்விட்டேன். கொஞ்ச நேரத்தில் ஏதோ நாற்றம் வர ஈயச்சொம்பு பாவமாக 'என்னைக் காப்பாத்து' என்று உருகி அழுது கொண்டிருந்தது!

என்ன செய்வது..அதற்கு ஆயுள் அவ்வளவுதான்!

பலமுறை வெளியில் போகும்போது வாட்ச், பர்ஸ், மொபைல் என்று எதையாவது மறந்துவிட்டு கொஞ்சதூரம் போனதும் ஞாபகம் வர, என் கணவர் பாவம்..காரைத் திருப்பிக் கொண்டு வந்து வீட்டைத் திறந்து எடுத்துப் போவோம்!

நேரில் பார்த்துப் பழகிய நண்பர்களைக் கூட வெகுநாள் கழித்துப் பார்க்கும்போது யாரென்று யோசிக்க, அவர்களே 'என்னை தெரியலயா? நான்தான்..' என்று அவர்களே சொன்னபின்பே நினைவு வரும்!

சிலநாள் முன்பு என்னை வந்து விசாரித்த ஒருவரைப் பார்த்து நான் திருதிருவென விழிக்க, அந்தப் பெண்ணோ 'நீங்க ரெண்டு வருஷம் முன்னால எங்காத்துக்கு வந்தேளே' என்றதும் என் நினைவைக் கிண்டிக் கிளறி யாரென்று புரிந்து கொண்டு பேரைச் சொல்லவும்..பாவம் அவர் வெறுத்து விட்டார்! இதுபோல் நிறைய்....ய மறதிகள்!

என் தோழி ஒருத்தி கேஸில் ஒரு தவலையில் வெந்நீருக்கு தண்ணீரை வைத்துவிட்டு ஆஃபீஸுக்கு போய் விட்டாள். மாலை திரும்பி வந்து பார்த்தபோது பாத்திரம் தீய்ந்து கேஸும் தீர்ந்து நாறிக் கொண்டிருந்ததாம்! இதெல்லாம் மறதி சாபமான சம்பவங்கள்!

என் கணவருக்கு ஞாபகசக்தி நிறைய்..ய! அதனால் இப்போதெல்லாம் எந்த சாமானை எங்கு வைக்கிறேன் என்று அவர் காதில் போட்டு விடுவேன்! நான் கேட்கும்போது சரியாக சொல்லிவிடுவார்! 'தாயே..என்னை மட்டும் மறந்துடாதம்மா!' என்று கைகூப்பிக் கெஞ்சும்போது நானே சிரித்து விடுவேன்!

முகநூலும், கூகுளும் நாம் அவற்றில் அக்கவுண்ட் ஆரம்பித்த அன்றுமுதல் நடந்த நிகழ்வுகளை நாள் தப்பாமல் நமக்கு சொல்லிவிடுவ

தாலேயே நாம் எதை மறந்தாலும் அவற்றிலிருந்து குறிப்புகளை எடுக்க முடிவது நமக்கு வரமே!

சில இழப்புகளிலிருந்து நம்மைத் தேற்றி வெளிக் கொண்டுவர மறதி அவசியமே. மறக்க வேண்டிய விஷயங்களை மனதில் போட்டுக் குழப்பி நாம் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும்போது அதை சிறிது சிறிதாக மறப்பதே நல்லது. 

நாம் வஞ்சிக்கப் பட்டாலோ, ஏமாற்றப் பட்டாலோ அந்த நினைவுகளிலிருந்து மாறி இயல்பு வாழ்க்கைக்கு வர மறதி அவசியமே!



மறதி, நம்மை கடந்த காலத்தில் இருந்து எதிர்காலத்தை நோக்கி முன்னேற உதவுகிறது. நடந்தவற்றையே நினைவில் கொண்டால்,  நிகழ்காலம் வீணாகிவிடும். இதனால் நமக்கு மறதியும் ஒரு வரம்தான். 


Saturday 13 March 2021

மாதவம்..Sunday_special

என்னைப் பொறுத்தவரை என்னை சரியாக வழிநடத்திய  பாசமான பெற்றோர்...அன்பும் காதலும் கொண்ட நான் ஆசைப்படும் எதையும் நிறைவேற்றும் நல்ல கணவர்...அறிவான ஆதரவான சிறந்த குழந்தைகள்...என்னைப் புரிந்து கொண்டு இசைவாக நடக்கும் மருமகள்கள்..நவரத்தினங்களாய் பேரக் குழந்தைகள்...இவையே என் தவப்பயன்தான் என்று நித்தமும் அந்த இறைவனுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்🙏

நான் எழுதப் போவது என் கணவரின் சித்திப் பாட்டி அதாவது என் மாமியாரின் சொந்த சித்தி. தர்மாம்பாள் என்ற அவரை தம்முப் பாட்டி என்றுதான் நாங்கள் அழைப்போம்.அந்த நாளையப் பெண்ணான அவரது தைர்யமும் சாமர்த்தியமும் என்னை வியக்க வைத்த விஷயங்கள்! 

குடந்தையில் நாங்கள் இருந்தபோது அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து ஜாங்கிரி, முறுக்கெல்லாம் செய்து தருவார்! அவர் பட்சணம் செய்யும்போது நானும் கற்றதோடு அவரின் வாழ்க்கை பற்றியும் நிறைய தெரிந்து கொண்டேன்.

அவர்  ஒரு நூற்றாண்டிற்கு முன்பு பிறந்தவர். என் மாமியாரைவிட சில மாதங்களே பெரியவர். என் மாமியாரின் அம்மாவும், அவர் பாட்டியும் ஒரே நேரம் கர்ப்பமாயிருந்ததாகவும்,என் மாமியாரின் அம்மா மாப்பிள்ளை எதிரில் வரவே மிகவும் வெட்கப்படுவார் என்றும் சொல்வார்!

ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து 15 வயதில் திருமணம் நடந்தது. அந்தக்கால முறையில் திருமணம் நடந்தது முதலே மடிசார். வீட்டு வேலைகள் அனைத்தும் அவர் தலையில். அவர் புகுந்த வீட்டில் பட்ட கஷ்டங்களைக் கேட்டால் மனம் கலங்கிவிடும். 

மாமியாரின் கொடுமை மட்டுமல்லாது அவரது இரண்டு புக்ககத்து விதவை அத்தைகளும் படுத்திய பாட்டை கதை கதையாக சொல்லி வருத்தப் படுவார். வீட்டு வேலைகள் அத்தனையும் செய்துவிட்டு ஒருவேளை சாப்பாடு கூட சரியாகப் போடாமல் கஷ்டப் படுத்துவார்களாம். 

'உங்க ஆத்துக்காரர்ட்ட சொல்ல மாட்டேளா'ன்னு கேட்டால், 'என்னை அவர்கூட பேச விட்டால்தானே' என்பார். அவருக்கு காஃபி கொடுக்கும்போது பேசலாம்னு பார்த்தா மூன்று பெண்களும் சேர்ந்து பேச வந்து விடுவார்களாம். 

தனியாகப் பேசுவதைக் கண்டாலே..'அவனை மயக்கப் பார்க்கறியா' என்பதோடு அவர்களைத் தனியாக படுக்கவும் அனுமதிக்க மாட்டார்களாம். அவர் கணவரும் பயந்து கொண்டு அவர்கள் சொல்வதைத்தான் கேட்பாராம்.

ஏழெட்டு மாதமாகியும் கர்ப்பமாகவில்லை என்ற சாக்குடன் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விட, அவரின் பெற்றோர் திரும்ப சமாதானம் செய்து கொண்டுவிட, இப்படியே இரண்டு வருடங்களாக... 'உங்கள் பெண்ணுக்கு குழந்தை பிறக்காததால் நாங்கள் வேறு திருமணம் செய்யப் போகிறோம்' (அவரோடு படுத்தால்தானே எனக்கு குழந்தை பிறக்கும் என்பார்!) என்று சொல்லி மொத்தமாக திருப்பி அனுப்பிவிட, பாவம் அவர் வாழாவெட்டி என்ற பெயரோடு பிறந்தவீட்டில் இருந்த நாட்களின் கொடுமையை சொல்லும்போது என் கண்கள் கலங்கிவிடும். 

17 வயதில் ஒரு பெண் மணமாகி வாழாமலிருப்பது எத்தனை கஷ்டமான விஷயம். அதிலும் ஊராரின் ஏச்சு பேச்சு வேறு. இந்தக் காலம் போல் இன்னொரு திருமணமும் செய்ய முடியாத நிலை.

'இரண்டாவது மனைவிக்கும் குழந்தை பிறக்காவிட்டாலும், அவள் சாமர்த்தியமாக இருந்து விட்டாள். நான்தான் ஏமாளி' என்று அழுவார். பெற்றோர் காலத்துக்கு பின் உடன் பிறப்புகளுடன் அவர்களுக்கு சுமையாக இருக்க முடியாதவர் வெளியிடங்களுக்கு சென்று பட்சணம், சமையல் செய்து கொடுத்து சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்தாராம். 

இடையில் கணவரின் மரணம் கேட்டு அந்தக்கால முறையில் மடி செய்து விட்டார்களாம். அவருடன் வாழாவிட்டாலும் இதுதான் அவரால் நான் பெற்ற கோலம் என்பார். 

அவருக்கு 35 வயதாக இருந்தபோது இவரைப் பற்றி அறிந்த ஒருவர் 'அரசு வேலையில் இருந்த உங்கள் கணவருக்கு பென்ஷன் கிடைக்கும்' என்று சொல்ல, 'அதற்கு ஆதாரம் இல்லையே?'என்றபோது, 'இரண்டாவது மனைவிக்கு பென்ஷன் வந்து கொண்டிருந்தால் உங்களுக்கு கிடைக்காது' என்றபோது யோசித்திருக்கிறார்!

தன்னைத் திருமணம் செய்து கொண்டு ஒழுங்காக வாழ்க்கை நடத்தாததால்தானே தான் இன்று இப்படி எல்லோராலும் ஏசப்படுகிறோம் என்று நிறைய அழுதபின் ஒரு முடிவுக்கு வந்தாராம். அந்த மனிதரின் பென்ஷனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற உறுதியுடன் தனியாக அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். 

அவர் கணவர் ஆசிரியராயிருந்த பள்ளியில் சென்று விபரங்களை சொல்லி அவர் வேலை பற்றிய அனைத்து விஷயங்களையும் அவர்கள் கைப்பட எழுதி வாங்கிக் கொண்டு, பென்ஷன் அலுவலகத்திற்கு சென்று அந்தப் பெயரில் யாராவது பென்ஷன் வாங்குகிறார்களா என்று விசாரித்ததில்,  இல்லை என்பதை அறிந்தார். தான் அவரது மனைவி என்பதை நம்பாதவர்கள் சாட்சிகளைக் கேட்டனராம்.

தன்னிடமிருந்த திருமணப் பத்திரிகை, கணவரின் புகைப்படம் மற்றும் அவர் பள்ளியில் பெற்ற விபரங்களுடன் பலமுறை சென்றாராம். அந்நாளில் விவாகரத்து பத்திரம் இல்லாததோடு, மீண்டும் அவர் திருமணம் செய்ததற்கான சாட்சியும் இல்லாததால், இவரே அவர் வாரிசு என்பதால் பென்ஷன் அப்ரூவ் ஆகியதாம்.

அவர் ஓய்வு பெற்ற நாளிலிருந்து அரியர்ஸ் சேர்ந்துவர, பாட்டி ஒரே நாளில் பணக்காரியாகிவிட்டேன் என்பார் சிரித்துக் கொண்டே! ஆனால் அதற்காக தான் இரண்டு வருடங்கள் நடந்த நடையும், அவர்களுக்கு கொடுத்த லஞ்சமும் வீண் போகவில்லை என்று மிகப் பெருமையாக சொல்வார்!

'ஏன் பாட்டி! இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த பென்ஷனை ஏன் வாங்கினேள்?' என்றால்,'என்னைக் கடைசிவரைக் காப்பாற்றுவேன் என்று என் கைப்பிடித்தவர் தைரியமில்லாமல் அடுத்தவர் பேச்சைக் கேட்டு நடுவில் விட்டதால்தானே இந்த கஷ்டம். இன்று நான் அவர் பணத்தில் வாழ்கிறேன் என்ற நினைவே நான் பெற்ற வெற்றி. ஏதோ ஒரு விதத்தில் அவரைப் பழி வாங்கிய சந்தோஷம்' என்றபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

வெறும் மூன்றாவது வரை படித்தவர் தனியாக,தைரியமாக இத்தனை விபரங்களை சேகரித்து மாதாமாதம் பென்ஷன் வாங்கியது எவ்வளவு பெரிய விஷயம். அந்த நாளில் இப்படிப்பட்ட பெண்களைக் காண்பதே அபூர்வம்தானே? எண்பது வயதுவரை வாழ்ந்து அவர் மறைந்த விஷயம் என் மனதை மிகவும் பாதித்தது.

என்னைப் பொறுத்தவரை இவர் கணவனோடு வாழ 'மாதவம்' செய்யாவிட்டாலும், தன் திறமையால் அவரால் கிடைத்த பணத்துடன் வாழ்ந்தது 'மா தவம்'தானே!

ராதாபாலு


Saturday 6 March 2021

Second Innings(28.2.'21)




#Sunday_special

இந்தத் தலைப்பை பார்த்ததும் நான் யோசித்தது..இது எத்தனையாவது இன்னிங்ஸ்?..என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு பருவமும் ஒரு இன்னிங்க்ஸ்தான்! ஒன்றில் பந்தாக..அடுத்ததில் பேட்( bat)டாக..மற்றொன்றில் ஆடுபவராக..இன்னொன்றில் மைதானமாக! இறுதியில் ஆட்டம் முடிந்து வெற்றியா தோல்வியா என்பதை தீர்மானிப்பவன் அந்த இறைவன்தான். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா..!

பிறந்து 15 வயதுவரை சீரும் சிறப்புமாக வளர்க்கப் படுகிறோம். நம் ஆசைகள் மறுக்கப் படுவதில்லை. கேட்குமுன்பு எல்லாம் கிடைக்கும்.பெற்றோர் ஆலோசனைபடி படித்து முடித்து ஓரளவு உலகம் பற்றி அறிந்து கொள்கிறோம். எனினும் சரியான புரிதல் கிடைப்பதில்லை.

30வயது வரை..அடுத்து மேலே என்னபடிப்பது..என் வேலைக்குச் செல்வது..நாம் ஒரு முடிவெடுக்க பார்த்தவர் பழகுபவர் அவரவர் அனுபவம் கூற, எதிலும் குழம்பிப் போகாமல் நம் வாழ்வை தீர்மானிக்கும் பருவம் இதுதான். இங்குதான் நம் ஆசைகள் பந்து போல் அடிபடுகிறது! நம் ஆசைப்படியா..பெற்றோர் விருப்பப்படியா என்ற மன வேற்றுமைகள். ஆசை முறையானபடி நிறைவேறுபவர்கள் வெல்கிறார்கள்.

அடுத்தது வாழ்வில் முக்யமான திருமணகாலம். அதிலும் காதல் மோதல் என்று பல நிலைகள். திருமணங்கள் யாரால் நிச்சயிக்கப் பட்டாலும் விட்டுக் கொடுத்து வாழ்பவர்கள் வெற்றி பெற்றவர்கள்! மனதில் திருப்தி இல்லாவிட்டாலும் வாழக் கிடைத்த வழி என்று ஏற்றுக் கொள்கிறோம். 

40-50 வயது வரை..அடுத்தபடி குழந்தைகள்..குடும்பம் பெருக  குழந்தைகள் பெரியவர்களாகி அவர்கள் விருப்பங்கள் சில நமக்கு சரியெனத் தோன்றும்..பலதில் விருப்பம் இருக்காது. தலைமுறை இடைவெளியால் நம் பேச்சுக்கு மதிப்பில்லாமல் போகும் நிலை. எல்லாரிடமும் மனம் வேறுபட்டு..போதுமடா வாழ்க்கை..என்ற எண்ணம் வலுத்து ஆட்டத்திலிருந்து விலகி விடுகிறோம்!

50க்கு மேல்..இது வாழ்வின் இறுதிக் கட்டம். வேலையில் ஓய்வு.. வியாதிகளின் ஆரம்பம்..பிள்ளைகள் பெரியவர்களாகி பெற்றோரை அதிகாரம் செய்யும்போது, விட்டு விலகும்போது அவர்கள் மேல் வைத்த பாசமே மனதுக்கு பாரமாகி கடவுளை அடிபணிவது ஒன்றே கடைசி வழியாகிறது.

என்னைப் பொறுத்தவரை இன்றுவரை நடந்த அனைத்துமே மிக சரியாக நடந்ததற்கு அந்த இறையருளே காரணம் என்பேன். அன்பான கணவர், ஆதரவான குழந்தைகள். என் ஆசையோடு அவர்களுக்கு விருப்பமான படிப்பு, அதில் சிறப்பாக இருந்து இன்றிருக்கும் உயர்நிலை, அருமையான மருமகன், மருமகள்கள் பேரன் பேத்திகள்...நிறைவான வாழ்வு.

இனிவரும் நாட்களும் இதே போல் வாழ அந்த இறைவனிடம் வேண்டுகிறேன்.

நம் மத்யமர் குழுவில் இருப்பவர்கள் பலரும் கடமைகளை முடித்து கடைசி இன்னிங்க்ஸில்தான் இருக்கிறோம். நாம் ஆசா

பாசங்களிலிருந்து விலகி நாம் மனம் திறந்து பல விஷயங்களை இங்கு பகிர்வதால் மனம் லேசாகிறது. 

அடுத்தவர் பகிரும் விஷயங்களைப் படிக்கும்போது..இதைவிட நம் நிலை உயர்வுதான் என்றும், கடவுள் இவரது கஷ்டங்களை தீர்க்கட்டும் என்று மனமுருகி வேண்டுவதாலும் நம் துன்பம் குறைகிறது.

நம் உறவுகள், பிள்ளைகள் நம் திறமைகளை அறிந்து எதுவும் சொல்லாமல் இருக்கும்போது, மற்றவர் பாராட்டுவது நமக்கு மனமகிழ்ச்சியைத் தருகிறது.

வாழ்வில் உற்சாகமும் நாமும் ஏதாவது செய்வோம் என்ற உத்வேகமும் கூடும்போது உடல் நோய்கள் கூட பெரிதாகத் தெரிவதில்லை. 

முகமும் முகவரியும் தெரியாததெரியாத நட்புகளின் ஆதரவும் ஆறுதலும் நமக்கு ஒரு டானிக் எனலாம். இந்த இன்னிங்க்ஸி



ல் மனதை லேசாக்கி இயல்புநிலையில் நம் வாழ்வைத் தொடர நிச்சயம் மத்யமர் ஒரு காரணம். 


Thursday 4 March 2021

புத்தாண்டே வருக🌻(31.12.'20)

 

🌺புத்தாண்டே வருக🌻

2020..ஆரம்பித்தபோதே ஆனந்தம்தான். எப்பொழுதும் நவராத்திரியிலிருந்தே நான்  பிஸியாகி விடுவேன்.மார்கழி முழுவதும் விடிகாலை பூஜை, விதவிதமாய் கோலம்.. நேரம் சரியாக இருக்கும்.

ஜனவரி 3 மும்பையில் என் பெண்ணின் மாமனாருக்கு 75வயது நிறைவு விழாவுக்கு சென்றபோது அங்குள்ள மத்யமர் தோழிகளான மோகனா, விஜியை சந்தித்தது இவ்வருடத்தின் முதல் சந்தோஷம்!

பொங்கல் முடிந்ததும் relaxation ற்காக ஹைதராபாதிலுள்ள பெண் வீட்டிற்குச்  சென்று ஒரு மாதம் இருந்துவிட்டு  வருவோம். அதனாலேயே இரண்டு வருடங்களாக மத்யமர் ஆண்டு விழாவிற்கு
வரமுடியவில்லை. இந்த ஆண்டும் அதேபோல் சென்று பல ஆலயங்கள்,  விசாகப்
பட்டினம், ஹோட்டல் சாப்பாடு என்று ஜாலியாக enjoy பண்ணிவிட்டு  வந்தோம்!

ஏப்ரல் மாதம் பிள்ளைகள் வீட்டுக்கு லண்டனும் பெர்லினும் சென்றுவர விஸா apply செய்திருந்தோம். அங்கு போக வேண்டிய இடங்களுக்கெல்லாம் லிஸ்ட் போட்டு, அதில் பத்மாவை சந்திக்க Denmark போகும் programmeம் உண்டு...

நாங்கள் குடந்தையில் புண்யக்ஷேத்ரம் என்ற இடத்தில் வீடு கட்டிக் கொண்டிருந்ததால் திருச்சியிலிருந்து இங்கு மார்ச் 18 வந்தோம்...
மார்ச்22முதல் ஊரடங்கு ஆரம்பிக்க...
கொரோனாவால் உலகமே ஸ்தம்பிக்க...
விஸா cancel ஆகி என் ஆசை புஸ்வாணமாயிற்று!

கட்டிட வேலைகளும் நின்றுவிட...
வெளியில் எங்கும் செல்ல முடியாமல்...
இங்கு மாசில்லாத காற்றும், காலடியில் காவேரியும்..
பசுமையான சுற்றுச் சூழலும் எங்களுக்கு புத்துணர்வுதர..
இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை இன்பமயம்தானே!

ஜூன் மாதத்தில் என் கணவரின் சித்தப்பா பிள்ளை கொரோனாவிற்கு பலியாக..சற்றே நிலைகுலைந்து போனோம் நாங்கள். வெளியில் வரவே பயந்த நாட்கள் அவை..
மனிதரைப் பார்த்து மனிதரே பயந்த கொடுமையான நாட்கள்...

ஜூலைக்குப் பின்பே வீட்டு வேலைகள் நடந்து, எங்கள் ஆசைப்படி வீடு கட்டி ஆகஸ்ட்டில் கிரகப்ரவேசம் செய்தோம். சென்னையி
லிருந்து வந்த என் பிள்ளை குடும்பம் இந்த சூழ்நிலையில் மயங்கிப் போனார்கள்!

பங்களா போல வீடு..பக்கத்தில் தோட்டம்..விளையாட நாய்க்குட்டி..மாஸ்க் போட வேண்டாம்..கால்வீசி நடக்கலாம்..காவேரியில் குளிக்கலாம் என்று பேத்திகளுக்கு பரம சந்தோஷம்!

பேத்திகளுக்கு online classes.. என் பிள்ளைக்கும் work from home என்பதால் கடந்த ஆறு மாதங்களாக இங்குதான் இருக்கிறார்கள். என் பெண்ணும் குழந்தைகளுடன் வர ஒரே கொண்டாட்டம்தான்.
பேத்திகளோ இனி ஜூன்மாதம்
பள்ளி திறக்கும்போது
போனால் போறும் என்று ஒரே குஷியில் இருக்கிறார்கள்!

வீட்டு வேலைகள் அதிகம் என்பதால் மத்யமரில் அதிகம் என்னால் எழுத முடியவில்லை. இந்தமுறை 'மத்யமர் மார்கழி வைபவத்'தில் கலந்து கொண்டு  திவ்யதேசங்கள் பற்றி பேசியதும், என் மருமகள் திருப்பாவைக்கு நடனம் ஆடியதும் மறக்க முடியாத சந்தோஷ நேரங்கள்!

கொரோனாவால் பல கஷ்டங்கள் வருத்தங்கள் இருந்தாலும் குடும்ப மக்கள் ஒன்றாக இருக்கும்போது ஒருவரை ஒருவர் இன்னும் அதிகம் புரிந்து கொள்ளவும், நேசிக்கவும் முடியும் என்பது மறுக்க முடியாத நிஜம்.

சென்ற ஆண்டு நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களைத் தந்தாலும் அவை நம்மை நம் மனதை சுற்றுப் புறத்தை எப்படி தலைகீழாக மாற்றியது என்பதை நம்மால் மறக்க முடியாது. 

இனிவரும் 2021ம் ஆண்டு நமக்கு ஏற்றங்களைத் தரும் சிறந்த ஆண்டாக இருக்க இறையருளை வேண்டுவோம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐

வீடியோ..மத்யமர்

 https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1593423394178802/

திருக்கண்ணங்குடி ஆலயம்

https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1594180250769783/
திருத்தேவனார்தொகை..திருக்கண்ணபுரம்

https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1598874070300401/
ஆர்த்தி dance..எல்லே..இளங்கிளியே

https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1602995546554920/
முப்பத்து மூவர் dance ஆர்த்தி

https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1603801026474372/
ப்ரியங்கா...ஆண்டாள் சரணம்

https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1608525482668593/
கூடாரை வெல்லும்..dance

கல்யாணம்_பண்ணிப்_பார்..3

கல்யாணம்_பண்ணிப்_பார்..3

கல்யாணம் பண்ணிப்பார்..2
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1620172344837240/
கல்யாணம் பண்ணிப்பார்..1
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1619434758244332/

என் மகள்
திருமணம் முடித்ததும் என் மூத்த மகனுக்கு  பெண் பார்க்க ஆரம்பித்தோம். அவன் Nanotechnologyயில் டாக்டர் பட்டம் பெற்று  ஜெர்மனியில் Max Planck instituteல் பணி புரிந்து கொண்டிருந்தான். தான்
ஒரு ரஷ்ய நாட்டுப் பெண்ணைக்  காதலிப்பதாகவும், அவளும் இவனைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாயும் சொன்னான். எனக்கு ஒரே அதிர்ச்சி. 'அதெல்லாம் சரிப்பட்டு வராது' என்று நான் மறுத்தேன். ஆனால், என் கணவரும் மற்ற பிள்ளைகளும் அவனுக்கு முழு சப்போர்ட்.

'நீ அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேசினால் மாறி விடுவாய். உன்னுடைய குணங்கள், செயல் முறைகள் எல்லாம் அவளிடமும் இருக்கிறது அம்மா! உனக்கு அவளை ரொம்பப் பிடித்துவிடும்' என்று எனக்கு ஐஸ் வைத்தான்!

அதோடு விடாமல் வெப்காமில் அவளைக் காட்டினான். பளிச்சென்று இருந்தாள். இவன் சொல்லிக் கொடுத்தபடி 'ஹலோ அம்மா! செளக்கியமா?' என்று அழகாகத் தமிழில் கேட்டாள்!

மறுத்துச் சொன்ன நானே என் கணவருடன் தாலி, புடவை சகிதம் ஜெர்மனி சென்று அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தோம்.அவளுக்கு ஆங்கிலம் சரளமாகப் பேச வராது. அதனால் என் பிள்ளை மூலம்தான் நாங்கள் இருவரும் பேசிக் கொள்வோம்! இப்பொழுது கற்றுக் கொண்டு நன்றாகப் பேசுகிறாள்.

முதல்முறை என் இரண்டாவது பிள்ளை கல்யாணத்துக்கு வந்தபோது அவள் எங்களிடம் பழகிய விதமும், அவளுடைய பண்பும், அன்பும் நல்ல பெண்தான் மருமகளாக வந்திருக்கிறாள் என்று மகிழ்ந்தேன்!

என் மகனிடம் அவள் காட்டும் பிரியமும், மரியாதையும் அவன் என்ன சொன்னாலும் உடனே செய்யும் பாங்கும், மணமாகி 15 வருடமாகியும் மாறவில்லை.

சென்ற ஆண்டு இங்கு வந்தபோது எங்கள் குலதெய்வ ஆலயத்திற்கு குடந்தை அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றிருந்தோம். எங்கள்
உறவினர்களுடன் அன்பாகப்
பழகி என் பிள்ளையுடன் சேர்ந்து நமஸ்காரம் செய்து மரியாதையோடு நடந்து கொண்டதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியமாகி
விட்டனர்.

அடுத்த மகனுக்கு பெண் தேடும் முன்பு ..நீ யாரையாவது லவ் பண்ணினா சொல்லு..என்றோம். நீயே பார் என்றதும் பார்க்க ஆரம்பித்தோம். இப்பவும் ஆயில்யம் வேண்டாம், மூத்தபிள்ளை வெளிநாட்டுப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டிருப்பதால் வேண்டாம் என்பவர்கள் இருப்பது வேடிக்கையாக இருந்தது!

இதையெல்லாம் பெரிது படுத்தாமல் நல்ல குடும்பம், படிப்பு, வேலை என்று பெண் வீட்டாரால் பாராட்டப்பட்டு என் பிள்ளைக்கு கிடைத்த மிக அருமையான மாட்டுப்பெண் இவள்! நாங்கள் எதுவும் அவர்களிடம் கேட்க
வில்லை. அவர்கள் விருப்பப்படி செய்த சீருடன் வந்தவள், எங்கள் பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொண்டு ஒன்றி வாழ்பவள்! இசை, நடனம் இவற்றில் ஆர்வம் உள்ளவள். இந்தமுறை திரு அனந்து அவர்களின் மார்கழி வைபவத்தில் மூன்று திருப்பாவைக்கு நடனம் ஆடியுள்ளாள்.

என் கடைசி பிள்ளை சிங்கப்பூரில் வேலையில் இருந்தான். என் மூன்றாம் மருமகள் அயர்லாந்து பெண். பெரிய பிள்ளை வெப்காமில் காட்டி பெண் எப்படி என்றான்! இவனோ சென்னைக்கு வீட்டிற்கே அவளை அழைத்து வந்து அறிமுகப் படுத்தினான்!

அவள் Engineer  மற்றும் Physiotherapist. அவளுக்கு தமிழ்த் தோழிகள் நிறைய உண்டு. இரண்டு முறை இந்தியாவிற்கு வந்தவளுக்கு இந்தியாவோடு ஒரு இந்தியன் மீதும் காதல் வந்து விட்டதாக சொன்னாள்! முதல்முறை வந்தபோதே எங்கள் எல்லோருடனும் மிக சகஜமாக பேசி பழகியதுடன் வற்றல்குழம்பு, உருளை ரோஸ்ட் எல்லாம் ரசித்து சாப்பிட்டாள்! சிங்கப்பூரில் திருமணம் நடந்தது. தற்போது லண்டனில் இருக்கிறார்கள்.

நம் குழந்தைகள் நம்மிடமிருந்து வந்தவர்கள். அதனால் அவர்கள் நம் இஷ்டப்படி நடக்க வேண்டும் என நாம் நினைப்பது தவறு.  ஒவ்வொருவருக்கும் தனியான எண்ணங்கள் ஆசைகள் உண்டு. அவர்கள் வாழ்க்கையை அவர்களே தீர்மானிப்பதில் தவறு என்ன?

எல்லா மனிதர்களிடமும் தனிப்பட்ட சிறப்பான குணங்கள் உண்டு. அதில் ஈர்ப்பு ஏற்படும் போதுதானே இருவருக்குள் காதல் ஏற்படுகிறது. ஒருவருக்
கொருவர் குறை கூறிக் கொள்ளாமல், சந்தோஷமோ, துக்கமோ இருவரும் இணைந்து அதனை அனுபவிப்போம் என்ற எண்ணம் இருந்தாலே காலம் முழுதும் இணைந்து இன்பமாக வாழ முடியும்.

நாமெல்லாம் கணவன்/மனைவி வேறுபட்ட எண்ணங்களோடு இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தோம்/வாழ்கிறோம். இன்றைய இளைய தலைமுறை அப்படி இல்லை.நிறைய யோசித்து முடிவெடுத்து சிறப்பாகவும் வாழ்கிறார்கள். நாம் அந்த நாளைய விஷயங்களைக் கூறி அதன்படி அவர்களை நடக்கச் சொல்வதால் நமக்குள் மனவேற்றுமைதான் வரும்.

வாழ்க்கை வாழ்வது ஒருமுறை. அதை தம் விருப்பத்திற்கு சந்தோஷமாக வாழ ஆசைப்
படுகிறார்கள். இதில் என்ன தவறு? பெரியவர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணங்களே இன்று டைவர்ஸில் முடிகிறதே.

'உனக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை' என்று சுலபமாக சொல்லிவிடலாம். இன்று நமக்கு ஆதரவாகப் பேசும் உறவும் நட்பும் நாளை நமக்கு கஷ்டம் வரும்போது கண்டுகொள்ள மாட்டார்கள்.

என் பிள்ளைகள் காதலித்த
போதும் நாங்கள் இதையெல்லாம் யோசித்தோம். அவர்களுக்கும் எடுத்துச் சொன்னோம். அவர்கள் உறுதியாக இருந்ததாலேயே திருமணத்திற்கு சம்மதித்தோம். இன்றுவரை அவர்கள் எங்களுடன் பாசமாக இருப்பதுடன், அவர்களும் ஒருவருக்கொருவர் அன்யோன்யமாய் வாழ்வதும் சந்தோஷமாக இருக்கிறது.

இன்று கூட்டுக் குடும்பங்கள் சாத்தியம் இல்லை.
இக்காலத்தில் அவரவர் வாழ்க்கையை தம் இஷ்டப்படி வாழவே அனைவரும் விரும்புகின்றனர். வீட்டுப் பெரியவர்களின் அறிவுரைகளும், வாழ்க்கை அனுபவங்களையும் இந்தத் தலைமுறையினர் கேட்டு நடக்க விரும்புவதில்லை. இன்றும் சில கூட்டுக்குடும்பங்கள் சிறப்பாக வாழ்வது பாராட்டத் தக்கது.

பெரும்பாலான  இளைய தலைமுறையினர் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். இங்கிருக்கும் பெரியவர்களும் வேலை ஓய்வு பெற்றபின் பொறுப்புகளி
லிருந்து விலகி அவரவர் விருப்பப்படி வாழ ஆசைப்படுகிறார்கள். இன்று Senior Citizen Homes அதிகமாயிருப்பதன் காரணம் இதுதான். நாம் சம்பாதிக்கும் காலத்திலேயே நமக்காக என்று பணத்தை சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. வயது முதிர்ந்தபின் குழந்தைகளை எதிர்பார்த்து இருக்க வேண்டாம்.

நாங்களும் என் இரண்டாவது பிள்ளையுடன் இருந்தோம். பெண், பிள்ளைகளுக்கு குழந்தைகள் பிறந்தபோது அங்கு சென்று தேவையான உதவிகள் செய்தோம். எல்லா கடமைகளும் முடித்த நிலையில் நமக்கென்று பூஜை ஆலயதரிசனம் என்ற ஒரு  வாழ்க்கை தேவை என்று தோன்ற, கடந்த எட்டு வருடங்களாக தனிக்
குடித்தனம்! எங்கள் எண்ணம் புரிந்து என் மகன் எங்களை தனித்து வாழ அனுமதித்தான். என் மருமகள்தான் ரொம்ப வருத்தப் பட்டாள்.

அவ்வப்போது பெண் பிள்ளைகள் இருக்கும் ஊருக்கு சென்று தங்கிவிட்டு வருவோம். இதனால் நமக்கும் குழந்தைகளுக்குமான நெருக்கம் அதிகமாகிறது. முக்கியமாக பேரன் பேத்திகள் நம்மோடு இருந்து மகிழ ஆசைப்படுகிறார்கள். இரண்டு மாதமானால்...எப்ப இங்க வருவாய் தாத்தா...என்று கூப்பிடுகிறார்கள்.

இப்பொழுது நாங்கள் குடந்தையில் இருக்கிறோம். காவிரிக் கரையோரம் அக்ரஹார டைப்பில் தூணும் திண்ணையுமாக தனித்தனி வீடுகள். சுத்தமான காற்று. மாசில்லாத சுகமான வாழ்க்கை! அமைதியான சுற்றுப்புற சூழ்நிலை!

சென்ற ஆகஸ்ட்டில் கிரகப்பிரவேசத்திற்கு வந்த என் மகன் இங்குதான் இருக்கிறான். பேத்திகளுக்கு பள்ளி திறந்தபின் இங்கிருந்து சென்னை போகணுமே என்ற வருத்தம்! நான் onlineல் படித்துக் கொண்டு இங்கேயே இருந்து விடுகிறேன் என்கிறாள் பெரிய பேத்தி!

நம் பிள்ளைகளை அவர்கள் குடும்பம் அவர்கள் பொறுப்பு என்று தள்ளி இருந்து பார்த்து சந்தோஷப்படுவதுடன், அவர்கள் கேட்டால் மட்டுமே தேவையான விஷயங்களைப் பற்றி சொல்வது நமக்கும் மரியாதை..அவர்களுக்கும் மகிழ்ச்சி.

கல்யாணம்_பண்ணிப்_பார்_2 (26.1.'21)

கல்யாணம்_பண்ணிப்_பார்_2

எனக்கு ஒரு பெண்..மூன்று பிள்ளைகள். பெண் டாக்டர். அவள் பத்தாம் வகுப்பு முடித்ததும்  என் கணவருக்கு கோலாப்பூர் மாற்றலாகிவிட அங்கு +2 முடித்து  மும்பையில் Grant Medical Collegeல் MBBS படித்தாள். நாங்களும் மும்பை சென்று விட்டோம். அவளுக்கு திருமணத்திற்கு பார்க்கலாம் என நாங்கள் யோசித்தபோது தனக்கு டாக்டர் பையன்தான் சரிவரும் என்றாள். நாங்கள் பார்த்தவரை இன்ஜினியர் வரன்களே அதிகம் வந்தது. Matrimonialலும்  டாக்டர்கள் அதிகம் இல்லை.


இரண்டாம் வருடம் படித்தபோது, தான் ஒரு சீனியர் பையனை விரும்புவதாக சொன்னாள். நாங்கள் இப்படித்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்தவில்லை. என் கணவர்...குழந்தைகளுக்கு படிப்பைக் கொடுத்திருக்

கிறோம். அவர்கள் சரியான முடிவுதான் எடுப்பார்கள்...

என்பார். 


பையனைப் பார்க்க வேண்டும் என்றபோது அவளே அழைத்து வந்து அறிமுகப் படுத்தினாள். மராட்டிய பையன். பார்க்க நன்றாக இருந்ததோடு மிக அமைதியாக மரியாதையாகப் பேசினான். அவர்கள் குடும்பம் பற்றி சொன்னதுடன் என் பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவர்கள் வீட்டார் ஒப்புக் கொள்வார்கள் என்றான். எங்களுக்கெல்லாம் ஹிந்தி தெரிந்ததால் அவனுடன் பேச முடிந்தது. 


அவனுக்கு இவள் தமிழ்ப் பெண் என்பதோடு இவளின் நீண்ட தலைமுடி, பளிச்சென்ற பேச்சு, உயரம் (இருவரும் ஒரே உயரம்)எல்லாம் பிடித்துப் போய்தான் இவளை propose செய்தானாம்!


எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. முதலில் மொழிபிரச்னை. (இப்போது மராட்டியில் கவிதை எழுதும்வரை தேறிவிட்டாள்!) பின் அவர்கள் பழக்க வழக்கங்கள் வித்யாசமானது. இவளுக்கு சரிவருமா என்று நான் (என் கணவருக்கு பெண் மேல் அதீத நம்பிக்கை. அவர் கவலைப்படவில்லை!) பயப்பட, அவளோ...நீங்கள் பார்த்த பையனுடன் சிறிது நேரமே பேசி முடிவு செய்து கல்யாணம் பண்ணிக் கொண்டால் பின்னால் பிரச்னைகள் வராதா? என்னை விரும்பும் ஒருவனோடு என்னால் அட்ஜஸ்ட் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ முடியும்..என்றாள்.


அன்று மாலையே அவன் பெற்றோர் எங்களுடன் பேசி தம் வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்தார்கள். அவர்களுக்கு இரண்டு பெண்கள், இரண்டு பிள்ளைகள். பெண்களுக்கு திருமணமாகி விட்டது. இவன் மூன்றாவது பிள்ளை.

எங்களுக்குள் பரஸ்பரம் பிடித்துவிட இருவரும் சம்பந்தி ஆகிவிடலாமென முடிவு செய்தோம்! 


என் பெண், மாப்பிள்ளையிடம்

...நீங்கள் இருவரும் இணைந்து வாழ முடியுமா? பின்னால் ஏதாவது பிரச்னை வந்தால் எங்களிடம் வரக்கூடாது. அந்த நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாங்கள் திருமணம் செய்து வைப்போம்...என்றோம். அவர்களும் கண்களில் காதலுடன் ஒப்புக் கொண்டார்கள்!


அவர்களிடம் திருமணம் எப்படி செய்வது சீரெல்லாம் என்ன செய்வது எனக்கேட்டபோது,

எங்களுக்கு எதுவும் வேண்டாம். நீங்கள உங்கள் முறைப்படி செய்வதுபோல் நாங்களும் எங்கள் முறையில் திருமணம் செய்ய விரும்புகிறோம் என்றனர். எங்களுக்கும் சந்தோஷமாக இருந்தது. 


என் பெண் படிப்பு முடித்ததும்  திருமணம் நடந்தது.  நாங்கள் எங்கள் ஆசைப்படி பெண் மாப்பிள்ளைக்கு டிரஸ், நகை, வெள்ளி சாமான்கள் பரிசாகக் கொடுத்தோம். அவர்களும் என் பெண்ணுக்கு  அவர்கள் முறைப்படி கருகமணி தாலி, தங்க செயின், வளையல் என செய்தனர். எந்த மனக்கசப்புகளும், விதண்டாவாதங்களும் இன்றி மிக விமரிசையாக திருமணம் நடந்தது. 


அதன்பின் சில மாதங்களில் என் பெண் அவர்கள் வீட்டு பழக்க வழக்கங்கள் சமையல் முறைகளை மிக நன்றாகப் புரிந்து கொண்டு செய்வதாக அவள் மாமியார் பாராட்டினார். மாமியார் மாமனார் மிகவும் நல்லவர்கள். எந்த விஷயமும் இவளுடன் ஆலோசித்தே செய்வார்கள். இன்றோடு அவளுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் முடிந்து விட்டது. 


ஒரு பேரன் 9ம் வகுப்பும், பேத்தி நான்காம் வகுப்பும் படிக்கிறார்கள். இன்றுவரை இருவரும் அதே காதலுடனும், பாசத்துடனும் பெரியவர்களிடம் மரியாதையோடும் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது என் மகள் ஒரு சிறந்த  கணவரைத் தேர்ந்தெடுத்து நல்ல குடும்பத்தில் சிறப்பாக வாழ்வது பெருமையாக உணர்கிறேன். 


பிள்ளைகளின் திருமணப் பதிவு பின்னால்!!


இன்று திருமணநாள் கொண்டாடும் என் மகள் கிரிஜா மாப்பிள்ளை விஜய்யை  நீங்களும் வாழ்த்துங்களேன்🙏


கல்யாணம்_பண்ணிப்பார்(1)

கல்யாணம்_பண்ணிப்பார் 

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக அந்த காலத்தில் சொல்வார்கள். அதன் பொருள் முகமறியாத ஆணும் பெண்ணும் பெரியோர் நிச்சயித்தபடி அவர்களின் ஆசியுடன் மணம் புரிந்து கொண்டு, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் அது சொர்க்கம்தான்!


அதன்பின் வந்த காலங்களில்..40, 45 வருடங்களுக்கு முன்பு..என் திருமணம் நடந்த சமயம் வரதட்சிணை முக்கியமாக இருந்ததால் திருமணங்கள் ரொக்கத்தில் முடிவாகின! 


அரசுவேலை மாப்பிள்ளைக்கு இவ்வளவு..பிஸினஸ் செய்பவருக்கு இவ்வளவு..வங்கி அதிகாரிக்கு இத்தனை என்று பணம்தான் அங்கு பிரதானமாக இருந்தது, மனித மனங்களை விட!


அப்பொழுதெல்லாம் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அதனால் பிள்ளை வீட்டார் ஏதோ ஆகாயத்திலிருந்து குதித்த மாதிரி பேசுவார்கள்! இன்றோ அந்த நிலை தலைகீழாகி பெண்கள் தம் விருப்பத்தின்படி திருமணம் செய்ய விரும்புகிறார்கள்! அவர்களும் சம்பாதிப்பதால் ஆண்களிடம் வதுதட்சணை கேட்பதில்லை!


இவை இரண்டிலுமே கெட்ட பெயர் பெறுவது Revathi Balaji   சொல்வது போல பிள்ளை,  பெண்களின் அம்மாக்கள் மட்டுமே! அப்பாக்களாகிய ஆண்கள் இந்தக் கொடுக்கல் வாங்கலில் involve ஆகாமல் ஓரங்கட்டப்பட்டு கைகட்டி வாய் பொத்தி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்!!


என் திருமணம் வரதட்சணை உச்சத்தில் இருந்த காலத்தில் நடந்த திருமணம். சிலர் தம் பிள்ளை ஜாதகத்துடன் வரதட்சணை நகை (வைரத்தோடு, வைர மூக்குத்தியுடன்)

 சீர் சாமான்கள் லிஸ்ட்டும் எழுதி அனுப்புவார்கள்! இதெல்லாம் பார்த்து எனக்கு வெறுத்து விட்டது. 


வரதட்சணை கேட்காத பையனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்றேன் நான்! ஹ்ம்ம்..நடக்குமா அப்படி? அடுத்தவர் பணத்தில் அப்படி என்ன ஆசையோ? என் புக்ககத்தார் என் அப்பாவிடம

..உங்களுக்கு ஒரே பெண்தானே? அதனால் ஒரு கை🖐️ கொடுத்து

டுங்கோ..என்று கேட்டனர்!😃


அந்நாளில் என் அப்பாவின் சம்பளமே மூன்று இலக்கம்தான்! நான் ஒரே பெண். எனக்கு கீழே மூன்று தம்பிகள் படித்துக் கொண்டிருந்தார்கள். அந்நாளில் பெண்ணின் திருமணம் ஒரு கட்டாயக் கடமை என்பதால் என் அப்பா ஏதோ கடனெல்லாம் வாங்கி தன் கடமையை நிறைவேற்றினார்!! 


இந்தக் கால திருமணங்கள் சொர்க்கத்திலும் ரொக்கத்திலும் இல்லாமல் இருவரின் எண்ணங்களிலும்தான் நிச்சயிக்கப் படுகின்றன! 


கல்யாணம் பண்ணிக்(கொண்டு) பார்த்தாச்சு! இனி கல்யாணம் பண்ணிப் பார்த்த பதிவு தொடரும்😊


Wednesday 3 March 2021

அன்பே_எங்கள்_உலக_தத்துவம்19.2.'21) 320 Articles



அன்பே_எங்கள்_உலக_தத்துவம்

அன்புக்கு உண்டோ அடைக்கும்தாழ்..

அனுபவிப்பவரே அறிவர் அன்பின் மகிழ்ச்சியை..

மௌனவார்த்தைகளும்

கோபமும் கூட அன்பின் வெளிப்பாடுகளே..


கிடைத்த அன்பை நிலைக்க வைப்பதே சுகம்..

நமக்கு பிடித்தவரிடம் கெஞ்ச வைப்பது அன்பு..

நம்மைப் பிடித்தவரைக் கொஞ்ச வைப்பதும் அன்பே..


அழகைவிட அன்பைத் தரும் உள்ளமே அழகானது..

அறிவாளிகளை விட அன்பானவரையே நம் மனம் விரும்புகிறது..

அன்புக்கு ஏங்குபவரே நாம் அன்பு செலுத்த ஏற்றவர்..


அன்பும் அக்கறையும் இணைந்ததே இனிய வாழ்வு..

பிடித்தவரிடம் அன்பு செய்வதை விட பிடிக்காதவரையும் தன்வயப் படுத்துவதே பேரன்பு..

வாழ்க்கையின் பக்கங்களை அழகாக்கும் எழுதுகோல் அன்பு..


தாயிடம் மட்டுமே கிடைப்பது தூய அன்பு..

நெஞ்சிலும் தோளிலும் சுமப்பது தந்தையன்பு..

காதலும் காமமும் கலந்தது

துணையின் அன்பு..

பாசமும் பரிவும் பிணைந்தது

பிள்ளைகள் அன்பு..


முகங்களும் முகவரியும் அறியாத

#மத்யமர்_நட்புக்களின் மாறாத மட்டிலா அன்பு..!

அன்புடன் பேசுவோம்..!

அவரவர் இடத்திலி

ருந்தே..!

அது நம் நட்பை பலப்படுத்தும்..!

நம்மை ஒன்றுபடுத்தும்..!

அன்பை விதைப்போம் - அதில்

மகிழ்ச்சி எனும் பூக்களை அறுவடை செய்வோம்..!

இன்பம்  கூட்டி 

இனிய ராகம் மீட்டி

இணைந்து வாழ்வோம்

இதயம் கலந்த அன்பினிலே!







Thursday 25 February 2021

என் பேத்தி சொல்லும் ஸ்லோகம்

 என் பேத்தி ப்ரியங்கா மிக  அழகாக சுலோகங்களை சொல்வாள். தாம்பரம் சங்கரா க்ளோபல் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். இப்பொழுது online classes என்பதால் தினமும் அவள் டீச்சரோடு சேர்ந்து சுலோகம் சொல்வாள். நான் அவளை வீடியோ எடுக்கிறேன் என்றவுடன் டிரஸ் பண்ணிக் கொண்டு சுவாமி முன்பு அமர்ந்து சொன்னாள். சில வார்த்தைகள் மழலையாகவே இருக்கும்! 


அவள் 'ஸ்ருதி ஸ்மிருதி 

புராணானாம் ஆலயம் கருணாலயம்

நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்'

என்ற ஸ்லோகத்தை 'சங்கரம் குளோப சங்கரம்' என்பாள். நான் ..அது குளோப சங்கரம் இல்லை.லோக சங்கரம்னு சொல்லணும்..என்றபோது

 ..எங்க ஸ்கூல் பேரு சங்கரா க்ளோபல் ஸ்கூல்தான. அதைப் பத்திதான் இந்த ஸ்லோகம்..

என்றபோது எனக்கு சிரிப்பு வந்தது! ஆனால் அவளுடைய அந்த நம்பிக்கை, பள்ளியின் மேலிருந்த மதிப்பு என்னைக் கவர்ந்தது. ஒருவிதத்தில் லோகம், குளோப் இரண்டுமே உலகத்தைக் குறிப்பதுதானே! 


மத்யமர் அனந்த நாராயணனின் மார்கழி வைபவத்தில் ப்ரியங்காவுக்கு...ஆண்டாள் ரங்கமன்னார் திருவடிகளே சரணம்...சொல்ல வாய்ப்பு கிடைத்தது.


இந்த மார்கழியில் நான் கோலம் போடவில்லை. பேத்தியோ தினமும்..நாம என்னிக்கு கோலம் போட்றது..என்று நச்சரித்து விட்டாள். மார்கழி ஆரம்ப முதலே மழை இங்கு விடாமல் பெய்ததால் நேற்று வீட்டுக்குள்ளேயே கோலம் போட்டேன். அவளும் கூடவே கலர் போட்டு அழகாக்க ஐடியாவெல்லாம் தருவாள்! 


Drawing, painting எல்லாவற்றிலும் ஆர்வம் உண்டு. தன்னையே கதாபாத்திரமாக்கி அவள் பார்பி பொம்மைகளுடன் பேசி விளையாடுவது காணக் கண்கொள்ளா காட்சி!


கலரெல்லாம் போய் தூக்கிப் போடும் நிலையிலிருந்த யானைக்கு மிக அழகாக வண்ணம் தீட்டினாள். இப்பொழுது யானை புதுயானை ஆகிவிட்டது!


சமைக்கும்போதும் கூட வந்து ..நான் சப்பாத்தி பண்றேன். நான் தோசை வார்க்கிறேன் பாட்டி.. என்று எல்லாம் செய்வாள். அவள் செய்தவைகளை ரசித்து ருசித்து சாப்பிடுபவர் அவள் தாத்தா!


இன்றைய மெனு என் மருமகள் ஆர்த்தி கைவண்ணத்தில் Paneer Kofta Curryயுடன் சப்பாத்தி. அவள் ப்ரெட், கேக், பிஸ்கட் எல்லாம் மிக அருமையாக செய்வாள். அவள் செய்த பட்டர், சாக்லேட் குக்கீஸ்.

#ராதாபாலு

Tuesday 23 February 2021

விட_முடியாத_பழக்கம்

 #Sunday_topic

#விட_முடியாத_பழக்கம்

எதைச் சொல்ல..எதை விட! காலை எழுவது முதல் இரவு வரை ஒவ்வொரு காரியத்திலும் எதையும்...இன்னிக்கு இப்படி வேண்டாம். மாற்றிச் செய்யலாம்...என்று செய்ய முடியவில்லையே! இதன் காரணமாக என் அம்மாவைத்தான் சொல்வேன். 

காலை 5 மணிக்கு எழ வேண்டும்..வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட வேண்டும்..குளித்து சுவாமிக்கு ஸ்லோகம் சொல்ல வேண்டும்..பிறகுதான் மற்ற வேலைகள் என்று என் அம்மா சொல்லிக் கொடுத்த விஷயங்கள் இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

காலை எழ சற்று நேரமாகிவிட்டால்..என்ன இன்னும் தூக்கம். மணியாச்சு..என்று என் அம்மாவின் குரல் ஒலிக்கும்! என் அம்மாவுக்கு எல்லா காரியங்களையும் perfectஆக செய்ய வேண்டும். 

துவைக்கும் கல்லில் (என் வீட்டில் துவைக்கும் கல் உண்டு) பளிச்சென்று துவைத்து  சுருக்கமில்லாமல் உலர்த்தி துணிகளை காய்ந்து எடுத்ததும் அழகாக மடித்து வைப்பதில் இருக்கும் நேர்த்தி மிஷினில் துவைப்பதில் மிஸ்ஸிங்!

காய்கறிகளை நறுக்குவதில் என் வழி தனிவழி. எனக்கு கத்தியில் நறுக்க வராது. அரிவாள்மணையில் ஐந்து நிமிஷத்தில் நறுக்கி விடுவேன்!

கிரைண்டர் மிக்ஸி இருந்தாலும் நான் அரைப்பது அம்மி கல்லுரலில்தான். என் கணவர் பலமுறை..ஏன் இப்படி கஷ்டப் படுகிறாய்? கிரைண்டரில் அரையேன்..என்பார். எனக்கு கதாகாலட்சேபமோ கச்சேரியோ கேட்டுக் கொண்டு அரைப்பது சுகமான அனுபவம்! உடலுக்கு எக்ஸர்சைஸும் ஆச்சே! விருந்தினர் வருகையின்போது மட்டுமே மிக்ஸி கிரைண்டர்!

நான் அழகாக அலங்காரம் செய்து கொள்வதில் ஆர்வமுள்ளவள் என்பதால் புடவை, நகைகள் அதுவும் imitation நகைகள் வாங்கும் ஆர்வத்தை விட முடியவில்லை!

எந்த வேலையையும் சிறப்பாக செய்ய விரும்புபவள் நான். அது கோலமோ சமையலோ வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதோ..அதை உடனிருப்பவர்கள் என் கணவர் உட்பட சற்று சரியில்லாமலோ மாற்றியோ செய்து விட்டால் சட்டென்று கோபமாகப் பேசி விடுவேன். 

என் கணவர் எனக்கு நேர்எதிர். யாரிடமும் கோபமே கொள்ளாத குணசீலர்! நான் என்ன தப்பு செய்தாலும் மிகவும் மென்மையாக எடுத்துச் சொல்வார். நான் கோபிக்கும்போது..சொல்வதை கோபிக்காமல் சொல்லேன்..என்கிறபோது எனக்கே அவரைப் பார்க்கப் பாவமாக இருக்கும்! அந்த குணத்தை சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

எந்த சாமானை எடுத்தாலும் அதே இடத்தில் திரும்ப வைக்கும் குணம் என்னிடம் கிடையாது! அடுத்த முறை அந்தப் பொருளைத் தேடும்போது என் கணவரிடமே..கொஞ்சம் தேடிக் கொடுங்கோளேன்..என்றால், தேடிக் கொண்டு வந்து தந்துவிட்டு..எடுத்ததை அதே இடத்தில் வைக்கும் குணம் எப்ப உனக்கு வருமோ?..என்பார்! நானும் வேடிக்கையாக..அடுத்த ஜன்மத்தில்..என்பேன்! 

இப்பொழுதெல்லாம் ஞாபகமாக எடுத்ததை அதே இடத்தில் வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்! வேறு எங்காவது வைத்தாலும் அந்த இடத்தை என் கணவரிடம் சொல்லி நினைவு வைத்துக் கொண்டு, நான் தேடும்போது சொல்லச் சொல்வேன்! எப்படி என் idea😉

மத்யமரில் உறுப்பினரான பிறகு லைக் வருதோ, கமெண்ட் வருதோ sunday special பதிவை போடுவது ஒரு #விட_முடியாத_பழக்கம் ஆயிடுத்து!!😄


Tuesday 12 January 2021

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..12.1.'21



தீபம் இதழில் பிரசுரமான என் கட்டுரை..

ஹனுமத் ஜயந்தி
இன்று ஹனுமனின் பிறந்தநாள். அனுமன் கதை நாம் அறிந்ததே. இன்று அவரது வித்யாசமான ஆலயம் பற்றி அறிவோம்.

மார்கழியில் வரும் அமாவாசையும், மூல நட்சத்திரமும் சேர்ந்த தினம் ஹனுமத் ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ராமபக்தியில் திளைத்து ராமரின் நினைவிலேயே இன்றும் ஹனுமான் சூக்ஷ்ம ரூபமாக இருப்பதாக ஐதீகம். இன்றும் ராமரின் கதை சொல்லப்படும்  இடத்தில் எல்லாம் ஹனுமான் சென்று பயபக்தியுடன் கேட்பதாக கூறப்படுகிறது. அந்த ஹனுமானின் ஆலயங்கள் நாடு முழுதும் உள்ளது. பால  ஹனுமான், பஞ்சமுக ஹனுமான், வீர ஹனுமான் என்று பல பெயர்களில் அழைக்கப்படும். ஹனுமத் ஜெயந்தி நாட்டில் மார்கழி மாத அமாவாசையிலும், வட  நாடுகளில் சித்திரை பௌர்ணமி அன்றும், ஆந்திராவில் 41 நாட்கள் விமரிசையாகவும் கொண்டாடப்படுகிறது. 

நல்லாத்தூரில் ஆலயம் கொண்டு அருள் தரும் வீரமங்கள ஆஞ்சநேயர் ஸ்ரீவியாசராயரால் உருவாக்கப்பட்டவர். 15ம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களின் குருவாக விளங்கிய வியாசராயர் ஒருமுறை துன்புற்ற போது,ஆஞ்சநேயரைத் துதித்து தன் துன்பம் நீங்கப் பெற்றால், தம் வாழ்நாள் முழுதும் ஹனுமனுக்கு பல ஆலயங்கள் எழுப்புவதாக வேண்டிக் கொண்டார். அவ்வாறே  732 ஹனுமான் ஆலயங்களை ஏற்படுத்தினார். அவற்றுள் பிரசித்தமான ஒன்றே குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள வீரமங்கள ஆஞ்சநேயர் ஆலயம். 

வியாசராயர் தன்  சீடர்களுடன் ஆஞ்சநேயரின் சிலையை திருப்பதியில் பிரதிஷ்டை செய்ய எடுத்துச் சென்றபோது, நதியில் வெள்ளம் வந்துவிட்டதால் நல்லாத்தூரிலேயே ஆலயம் எழுப்பி, அனுமனை ஸ்தாபித்தார். அதனாலேயே திருப்பதியை நோக்கி செல்வது போன்றும், ஹனுமானின் முகம் திருப்பதி இருக்கும் திசை நோக்கியும்  உள்ளதாம்.

பல நாட்கள்  மண்ணில் பாம்புப் புற்றில் புதைந்து கிடந்த ஆஞ்சநேயரை அக்கோயிலில் குடிகொண்டிருக்கும் நாகங்கள் பூஜித்து வந்ததாம். சென்னையைச் சேர்ந்த திரு சக்கரவர்த்தி என்ற தொழிலதிபரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர் தனக்கு ஆலயம் எழுப்பும்படி கூறி, அவரால் சீர்திருத்தப்பட்டு அழகிய ஆலயம் உருவாகியது. 1998ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இன்றும் நாகங்கள் இந்த ஹனுமனை தினமும் வந்து வழிபட்டு செல்வதாகக் கூறப்படுகிறது.

அடி உயர ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பால ஆஞ்சநேயராகக் காட்சிதரும் இவரின் அங்கத்தில் அணிந்திருக்கும் ஆபரணங்களின் அழகே அழகு. கிழக்கு பார்த்த சந்நிதியில் வடக்கு நோக்கியவாறு காட்சிதரும் ஆஞ்சநேயரின் கண்கள் கிழக்கு பார்த்து அமைந்திருப்பது சிறப்பு. 

வலக்கை அபய ஹஸ்தமாகவும், இடக்கையில் தாமரை மொட்டும் தாங்கியபடி காட்சி தரும் அவரது கைகள்  கேயூரம், அங்கதம், கங்கணம் என்ற ஆபரணங்களோடு விளங்குகிறது. தாமரை ஞானம், ஐஸ்வர்யம், வெற்றி மூன்றையும் உணர்த்துவதால் முத்தேவியரான லட்சுமி, சரஸ்வதி, துர்கையை எடுத்துக் காட்டுகிறது. கால்களில் தண்டை, நூபுரம் இவற்றுடன் பிரம்மச்சாரி என்பதன் அடையாளமாக கௌபீனம், தலையில் முடியப்பட்ட சிகை, பூணூல் இவற்றோடு வைணவர்களின் அடையாளமாக நெற்றியில் திருமண்   உள்ளது. பிங்காக்ஷம் என்னும் பொன்வண்ண கண்மணிகளுடன் , பாதி மூடிய விழிகளால் பக்தர்களுக்கு தன்  அருளை வாரி வழங்குகிறார்.

பஞ்சமுக குண்டலங்களைக் கொண்ட அவரது அகன்ற காதுகள் சதாநேரமும் ராமகதையில் லயித்துள்ளது.இரண்டு கைகளிலும் கேயூரம், கங்கணம், பரிஹரியாஜா என்ற அழகிய ஆபரணங்களும், காலில் தண்டை, நூபுரம் அணிந்து சர்வாலங்கார பூஷிதனாகக் காட்சி தருகிறார். கோரைப்பல், இடுப்புப் பட்டை,கழுத்தில் நவரத்னம் பதித்த சாலிக்ராம மாலை, தலைக்கு மேல் உயர்ந்த வாலில் கட்டிய மணி என்று அத்தனை அழகாய் இருக்கிறார் பால  ஆஞ்சநேயர். 

அவரது பின்பக்கம்மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களும் வடிக்கப் பட்டுள்ளன. அவர்முன் நின்று நம் வேண்டுதல்களை முறையிடும்போது 'யாம் இருக்க கவலையில்லை' என்று பாதி திறந்த அருள் விழிகளால் நம்மைப்  பார்த்து கையசைத்து ஆறுதல் சொல்வது போல தோன்றுகிறது. மிக்க வரபிரசாதியானவராம்   இவர்! மலை போன்ற துன்பங்களையும் பனிபோல நீக்குவதில் இந்த ஹனுமனுக்கு இணை இவரே என்று கூறுகின்றனர். திருமண பாக்கியம், குழந்தைப்பேறு, 
நல்ல வேலை, நோயற்ற வாழ்விற்கு இந்த ஹனுமனை வழிபட்டால் உடன் பலன் நிச்சயம்.

ஆஞ்சநேயரின் கருவறை விமானத்தில் தெற்கில் சங்கு, சக்ரதாரியான யோக   ஆஞ்சநேயரும்,
வடக்கில் இடுப்பில் கைகளுடன் காட்சி தரும் வீர ஆஞ்சநேயரும், கிழக்கில் பக்த ஆஞ்சநேயரும், மேற்கில் பத்து கரங்களும், ஐந்து முகங்களும் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயரும் அழகுறக் காட்சி தருகின்றனர்.

ஆஞ்சநேயர் சன்னிதியை சுற்றிலும் சீதா, லக்ஷ்மண ஸ்ரீராமர், லக்ஷ்மி வராகர், லக்ஷ்மி நரசிம்மர், லக்ஷ்மி ஹயக்ரீவர், மங்கள கணபதி, தக்ஷிணாமூர்த்தி,நாகதேவதை, வாகனங்களுடன் நவகிரக சன்னிதிகள் அமைந்துள்ளன. சனீஸ்வரர் ஆஞ்சநேயரை நேருக்கு நேர் பார்த்தவாறு அமைந்துள்ளார். அதனால் இத்தலம் ராகு, கேது தோஷப் பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது. 

வெளியில் 42 அடியில் சுதைரூபமாகக் காட்சி தரும் அமர்ந்த ஆஞ்சநேயரின் வால்  அவரது இடது கைக்குள்ளாக வெளியில் வந்திருப்பது போல் அமைத்திருப்பது அற்புதமான கலையம்சமாகும்.

வைகானச ஆகமப்படி பூஜைகள் நடைபெறும் இவ்வாலயத்தில் ராமநவமி, ஹனுமத் ஜெயந்தி மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. மற்றும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகள் மிக விசேஷமானவை.

ஆலயம் நல்லாத்தூரில் குசஸ்தலை ஆற்றின் கரையில் திருத்தணியிலிருந்து 
20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

ஆலய நேரம்---காலை 6 -12---மாலை 4 -8    தொலைபேசி...04118-270666

இன்றைய நிவேதனம்..பால் பாயசம்..தேங்காய்ப்பால் பொங்கல்

ஆஞ்சநேயர் கோலம்

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..11.1.'21





மார்கழி இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. ஒரு மாதம் பூராவும் விடிகாலை எழுவது, பூஜை, திருப்பாவை, கோலம், பஜனை, பொங்கல் என்று உற்சாகமாகப் போயிற்று! எல்லா ஆலயங்களும் இந்த மாதம் பூராவும் விழாக் கோலம் கொண்டு சிறப்பாக வழிபாடுகள் நடந்தன.

திருப்பாவை நாயகி ஆண்டாளின் திருத்தலமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் கூடாரவல்லி எனும் இன்றைய நாளில் பக்தர்கள் ஆண்டாளை தரிசிக்க திரளாக வருவர்.

இன்றுதான் ஆண்டாள் விரதத்தைப் பூர்த்தி செய்கிறாள். மார்கழி இரண்டாம் நாள் ஆண்டாள் கண்ணனின் தரிசனத்திற்காக கடுமையான விரதம் மேற்கொள்ளும்படி தன் தோழிகளைக் கேட்டுக் கொள்கிறாள். அந்த தரிசனம் கிடைத்தபின்பு ஆண்டாள் தன் விரதத்தைப் பூர்த்தி செய்வதை 27ம் பாசுரத்தில் குறிப்பிட்டு    பாடிப்புகழ்கிறாள்.

'மூட நெய் பெய்து முழங்கை வழிவார' என்பதன் பொருள் என்ன? ஆண்டாள் ஏன் அப்படி சொல்கிறாள்?ஆண்டாளும் தோழிகளும் கண்ணனின் தரிசனம் பெற்று பிரசாதத்தை சாப்பிட்டு முடித்து விட்டால் கண்ணன் கிளம்பி விடுவானே!

அதனால் அக்காரவடிசிலை  கையிலெடுத்துவிட்டு, சாப்பிடாமல் அவனோடு பேசியே பொழுதைக் கழிப்பார்களாம்! அதற்குள் கையிலிருக்கும் அக்கார அடிசிலிருந்து நெய் பிரிந்து முழங்கை வரை வந்து விடுமாம்!

திருமண வரம் வேண்டுவோர்  இந்த நாளில்,  தவறாமல் பெருமாள் கோயிலுக்குச் சென்று ஆண்டாள் சந்நிதியில் நின்று ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்னும் திருப்பாவை 27 வது பாசுரத்தைப் பாடி வேண்டினால் விரைவில் திருமணம் நடைபெறும்.

கூடாரவல்லி அன்று அக்காரஅடிசிலும் வெண்ணெயும் நிவேதிக்க வேண்டும். இதற்கு ஒரு காரணம் உண்டு. ஆண்டாள் நாச்சியார், அந்தக் கண்ணனே தனக்கு மணவாளனாகினால் 108 பாத்திரங்களில் அக்கார அடிசிலும் வெண்ணெயும் சமர்ப்பிக்கிறேன்’ என்று வேண்டிக்கொண்டாளாம். 

அவள் திருமண மகிழ்ச்சியில் மறந்திருப்பாளென நினைத்த ஸ்ரீராமாநுஜர் அவள் சார்பாக  அந்த வேண்டுதலை நிறை 

வேற்றினாராம். இதனால் 'பெரும்புதூர் மாமுனிக்கு பின் ஆனாள் வாழியே' என்றபடி அவருக்கு தங்கையாகிறாள் ஆண்டாள்! அவர் ஸ்ரீவில்லித்தூர் வந்தபோது ஆண்டாள் 'அண்ணா' எனக் கூப்பிட்டபடி எட்டடி முன்னால் வந்து விட்டாளாம்.அதனாலேயே இன்றும் அங்கு மூலவரை விட்டு எட்டடி முன்னால் உற்சவர் உள்ளது.

எனவே திருமண வரம் வேண்டுபவர்கள் கூடாரவல்லி அன்று  வீட்டிலேயே ஆண்டாள் வழிபாடு செய்து அக்கார அடிசல் மற்றும் வெண்ணெயினைப் பெருமாளுக்கு சமர்ப்பித்து வேண்டிக்கொண்டால் திருமணம் விரைவில்  கைகூடும்.

ஆண்டாள் பூமகளின் திருஅவதாரம். கூடாரவல்லி நாளில் நம் தாயாகிய பூமித் தாயைப் போற்றிப் புகழ்ந்து நற்பலன்களைப் பெறுவோம்.

இன்றைய நிவேதனம்..மில்லட் பொங்கல், அக்கார அடிசில்


🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..9.1.'21





மார்கழி வளர்பிறை ஏகாதசி இன்று அனுஷ்டிக்கப் படுகிறது.அதற்கு சபலா ஏகாதசி என்று பெயர். இவ்வருடம் ஜனவரியில் வரும் இந்த சபலா ஏகாதசி டிசம்பர் 31 அன்று மீண்டும் வருவது சிறப்பாகக் கூறப்படுகிறது.

இதற்கான கதை வித்யாசமானது. மாகிஷ்மன் என்ற மன்னனின் மூத்த மகன் லும்பக். அவன் நற்குணங்களின்றி தீய வழியில் வாழ்ந்ததால், அரசன் அவனை நாடு கடத்தி விட்டான். செல்வந்தனாக சொகுசாக வாழ்ந்தவன் காடுகளில் வாழ முடியாமல் உணவின்றி தவித்தான். ஒருநாள் இரவு உணவின்றி பசியால் தூங்க முடியாமல் தவித்தான். மறுநாள் தன் விதியை நொந்தபடி இறைவனை வேண்டி கிடைத்த பழங்களைக் கொண்டு வந்து சாப்பிட்டும் பசி அடங்காததால் அன்றும் தூக்கமின்றி கழித்தான்.

அவனுக்கே தெரியாமல் சபலா ஏகாதசி அன்று விரதம் இருந்ததால் அவன் நற்புத்தி அடைந்தான். மனம் திருந்தி நாட்டுக்குச் சென்றவனை அரசன் மகிழ்ந்து வரவேற்று அவனை மன்னனாக்கினான்.அவனும் பக்தியுடன் நல்ல முறையில் அரசாண்டு விஷ்ணுலோகம் அடைந்தான். 

அறியாமல் விரதம் இருந்தாலும் நற்பலன்களையும் மோட்சத்தையும் தரும் இந்த ஏகாதசி விரதம். 

ஏகாதசி நாட்களில்  உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும். அன்று துளசி இலை பறிக்கக்கூடாது. பூஜைக்குரிய துளசியை முதல்நாளே பறித்துவிட வேண்டும். மறுநாள் துவாதசியன்று சூரிய உதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்திய பின்பே உணவு உண்ண வேண்டும்..

துவாதசியன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் உணவில் இடம்பெற வேண்டும். அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து நாம் சாப்பிட வேண்டும். அன்று பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும். 

இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும். சகல செல்வங்களும் உண்டாகும். சபலா என்பதற்கு வெற்றி என்பது பொருள். இந்த விரதம் இருப்பவர்கள் வாழ்வில் பல வெற்றிகளைப் பெற்று சிறப்பாக வாழ்ந்து நாராயணன் திருவடி அடைவர்.

சென்ற ஆண்டு நான் போட்ட பெருமாள் கோலங்களில் சில உங்கள் பார்வைக்கு..

இன்றைய நிவேதனம்..பயத்தம்பருப்பு பாயசம்..கோதுமைரவா மில்க்மெய்ட் பொங்கல்


Saturday_special..9.1.2021

 என் மருமகள் ஆர்த்தி மிக நன்றாகப் பாடுவாள். நடனம் ஆடுவாள்.ஆனால் இளம் வயதில் அவளை யாரும் உற்சாகப் படுத்தி ஆடவோ பாடவோ சொல்லவில்லை என்று குறைப்பட்டுக் கொள்வாள். 

அவள் திருமணத்தில் நலங்கின்போது அப்பொழுது பிரபலமான  சந்திரமுகி திரைப்படத்தில் வரும் பாட்டான 'ராரா' பாட, அவள் பாட்டில் என் மகனோடு சேர்ந்து மயங்கி விட்டோம் நாங்களும்! எந்தப் பாட்டும் கேட்டதும் அப்படியே பாடுவாள். நடனமும் அப்படியே! இத்தனைக்கும் அவள் முறையாக நடனமோ இசையோ கற்றுக் கொள்ளவில்லை.  

எங்கள் சஷ்டிஅப்த பூர்த்தியின்போது என் பெண்ணும் அவளுமாக ஆடிய நடனத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர். சென்னையில் நாங்கள் குடியிருந்த பில்டிங்கில் சுதந்திர தினத்தன்று அவள் ஆடிய 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' நடனத்துக்கு பலத்த கைதட்டல் கிடைத்தது!

இப்பொழுது அவர்கள் எங்களுடன் இருப்பதால் அனந்து அவர்களின் 'மத்யமர்  மார்கழி வைபவத்தில் @ திருப்பாவைக்கு நடனம் ஆடச் சொன்னேன். இரண்டு நாளில் practice செய்து அருமையாக ஆடினாள். 

எவருமே பாராட்டி ஊக்கமளிக்கும்போதுதான் அவர்களுக்குள்ளிருக்கும் திறமை வெளிப்படும். நம் மத்யமர் திறமைகளை ஊக்கப்படுத்துவதால்தான் இன்று பலரும் தம் உள்ளே மறைந்திருந்த எழுத்து, இசை, நடனம், ஓவியம் போன்ற திறமைகளை வெளிக்காட்ட முடிகிறது. இன்று ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு தனித்திறமை மறைந்திருப்பதை மத்யமரில் எழுதுபவர்களிடமிருந்து கண்கூடாகக் காணமுடிகிறது. அதனால் அடையும் மகிழ்ச்சியும் தனிதானே! இதற்கு மத்யமர் தளம் உதவியாக இருப்பதை நினைத்து மிகப் பெருமையாக உள்ளது. 

இதில் நான் மட்டுமன்றி என் குடும்ப உறுப்பினர்களின் திறமையையும் வெளிப்படுத்த முடிவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் மருமகள் ஆர்த்தியின் திருப்பாவை நடனங்கள் உங்கள் பார்வைக்கு! மத்யமருக்கு நன்றிகள் பல🙏


🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..8.1.'21




மார்கழியின் மற்றொரு சிறப்புகச்சேரிகளும் இசைவிழாக்களும்!

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மார்கழி மாதக் கச்சேரிகள் இம்முறை இணையதளங்கள் மூலம் நடத்தப் படுகிறது.
ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, மாணிக்க வாசகரின் திருவெம்பாவை, நாம சங்கீர்த்தனம் முதல் தொடங்கி இசை கச்சேரிகள், நாடகம், நடனம் என கலைகள் அனைத்தையும் கொண்டாடும் மரபாக மாறி விட்டது மார்கழி திருவிழா.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முழுதும் கருநாடக இசைக் கச்சேரிகள் நடத்தப்
படுகின்றன.இதுவே டிசம்பர் இசை விழா அல்லது மார்கழி இசைவிழா என்றழைக்கப்
படுகிறது. இவ்விழா நடக்கும் இதைடிசம்பர் சீசன் எனப் மெட்ராஸ் மியூசிக் சீசன் என்றும் அக்காலம் முதற்கொண்டு சொல்லப்பட்டு வருகிறது.

அந்நாளில் இயல் இசைக் கலைஞர்கள் நம் நாட்டிலேயே இருந்தார்கள். அது ஒன்றே அவர்கள் தொழிலாகவும் இருந்தது. இன்றோ தம் வேலைநிமித்தம் வெளிநாடுகளில் இருப்போர் இந்த இசை நிகழ்ச்சிக்காக நம் நாட்டிற்கு வருகிறார்கள்.

1927 ஆம் ஆண்டு மியூசிக் அகாடமி தொடங்கப்பட்டது. அந்தநாளைக் குறிக்குமுகமாக ஒவ்வொரு ஆண்டும் ஒருமாதம் இசை விழா கொண்டாடப்
பட்டது.  இந்த விழாவில் கச்சேரிகள், ஹரி கதைகள்,  இசை விரிவுரைகள், விருது மற்றும் பட்டம் வழங்குதல் போன்றவை பாரம்பரியமாக நிகழ்த்தப்படுகின்றன. காலப்போக்கில் நடனம் மற்றும் நாடகங்களும் இவ்விழாவில் இடம்பெற்றன. இன்றோ பல ஊர்களிலும் பல சபாக்கள் போட்டி போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

இன்றைய நிவேதனம்..வெண் பொங்கல்..சர்க்கரைப் பொங்கல்

இன்றைய கோலம்..இழைகோலம்

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..6.1.'21




மார்கழி மாதத்திற்கு ஏராளமான புராண சிறப்புகள் உண்டு. மற்ற மாதங்களில் ஒரு நாளோ, ஒரு கிழமையோ மட்டுமே  இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழியில் மட்டும் அந்த மாதம் முழுவதும் இறைவனை வழிபடும் மாதமாகப் போற்றப்படுகிறது.


மார்கழி மாதம் தேவர் மாதம் எனப்படும். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.


நம்முடைய ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி  வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகும். சூரிய உதயத்துக்கு  முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும்.


பெருமைகள் அதாவது 'பீடு' நிறைந்த மாதம் என்பதே மருவி 'பீடை' என்று ஆனது. 'பீடு' என்றால் 'பெருமை'எனப் பொருள்.


மார்கழியின் 30 நாட்களும் விரதம் இருந்து, பெருமாளைத் தனது கணவனாக ஆண்டாள் ஏற்றுக் கொண்டாள்.


மார்கழி மாதத்திற்கு ஏராளமான புராண சிறப்புகள் உண்டு. அதாவது, மகாபாரத யுத்தம் இம்மாதத்தில் தான் நடந்ததாம்.


திருப்பாற்கடல் கடையப்பட்ட

போது, முதலில் விஷம் வந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியது இந்த மார்கழி மாதத்தில்தான்.


இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, 

கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான் என்பது வரலாறு.


இறை வழிபாட்டிற்கு  சிறந்த மாதமாக கருதப்படும் இந்த மார்கழி மாதத்தில் நாமும் வைகறைத் துயிலெழுந்து இறைவனை எண்ணத்தால் துதித்துப் போற்றி அனைத்து செல்வங்களையும் பெறுவோம்.


இன்றைய கோலம்..Rangoli with a message..Welcoming vaccine for Corona


இன்றைய நிவேதனம்..அன்னாசிப் பொங்கல்


🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..5.1.'21




மார்கழியில் கோலம் போடுவதன் முக்கியத்துவம் பற்றி பார்த்தோம். இனி எப்படி கோலம் போட வேண்டும் என்று பார்ப்போம்.

பசுவின் சாணி ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால் சாணத்தை நீரில் கரைத்து வாசல் தெளிக்கவேண்டும்.
கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களினால் நோய்த் தொற்றுகள் ஏற்படும்.

இதைத் தவிர்க்கவே சாணத்தில் மகாலட்சுமி உறைவதாகவும், சாணப் பிள்ளையார் பிடித்து வைத்தால் நல்லது என்றும் கூறி வாசலில் சாணத்தைக் கரைத்துத் தெளிப்பதை பழக்கமாக்கினர் நம் முன்னோர்.

அதன்மீது அரிசி மாவில் கோலமிட வேண்டும். செருப்பு போட்டுக் கொண்டு கோலமிடக் கூடாது.

மேலிருந்து கீழ் நோக்கி புள்ளிகள் வைத்து, கீழிருந்து மேல் நோக்கி கோலம் வரைய வேண்டும். அழித்து, அழித்து கோலம் போடக் கூடாது.

பொதுவாக, கோலம் போடுவதில் பல பலன்கள் உள்ளது. குனிந்து கோலமிடுவது, நல்ல யோகா செய்வது போன்ற பயன்தரும். 

மார்கழியில் விடிகாலை ஓஸோன் ஈதிகமாக இருப்பதால் கோலமிடும்போது நல்ல சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்.

புள்ளிகள் வைத்துக்  கோலம் போடுவதால், புத்தி சிதறாமல் ஒரு நிலையில் இருக்க பயிற்சியாகும். தலைக்கு ரத்த ஓட்டம் பாய்வதால், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

நாம் நடக்கும் போது நம் காலடிபட்டு எறும்பு, பூச்சி போன்ற பல உயிர்கள் இறந்து போவதால் ஏற்படும்  தோஷத்
தினால் கன்னிப்பெண்களுக்கு
திருமணத்தில் தடை வரும்.
மார்கழிக் குளிரில் பறவை
களும், எறும்புகளும்  உணவு கிடைக்காமல் திண்டாடும். நாம் வாசலில் அரிசிமாவில்  கோலம் போடுவதால், எறும்புகளுக்கு உணவாகும். இதனால் திருமண தோஷம் நீங்கி விரைவில் மணமாலை கிட்டும்! மேலும் அன்னதானம்
செய்த பயன் கிடைக்கும்.

இன்றைய கோலம்..Doodle art Rangoli

நிவேதனம்..அவல் க்ரீன் பொங்கல்