Tuesday 23 February 2021

விட_முடியாத_பழக்கம்

 #Sunday_topic

#விட_முடியாத_பழக்கம்

எதைச் சொல்ல..எதை விட! காலை எழுவது முதல் இரவு வரை ஒவ்வொரு காரியத்திலும் எதையும்...இன்னிக்கு இப்படி வேண்டாம். மாற்றிச் செய்யலாம்...என்று செய்ய முடியவில்லையே! இதன் காரணமாக என் அம்மாவைத்தான் சொல்வேன். 

காலை 5 மணிக்கு எழ வேண்டும்..வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட வேண்டும்..குளித்து சுவாமிக்கு ஸ்லோகம் சொல்ல வேண்டும்..பிறகுதான் மற்ற வேலைகள் என்று என் அம்மா சொல்லிக் கொடுத்த விஷயங்கள் இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

காலை எழ சற்று நேரமாகிவிட்டால்..என்ன இன்னும் தூக்கம். மணியாச்சு..என்று என் அம்மாவின் குரல் ஒலிக்கும்! என் அம்மாவுக்கு எல்லா காரியங்களையும் perfectஆக செய்ய வேண்டும். 

துவைக்கும் கல்லில் (என் வீட்டில் துவைக்கும் கல் உண்டு) பளிச்சென்று துவைத்து  சுருக்கமில்லாமல் உலர்த்தி துணிகளை காய்ந்து எடுத்ததும் அழகாக மடித்து வைப்பதில் இருக்கும் நேர்த்தி மிஷினில் துவைப்பதில் மிஸ்ஸிங்!

காய்கறிகளை நறுக்குவதில் என் வழி தனிவழி. எனக்கு கத்தியில் நறுக்க வராது. அரிவாள்மணையில் ஐந்து நிமிஷத்தில் நறுக்கி விடுவேன்!

கிரைண்டர் மிக்ஸி இருந்தாலும் நான் அரைப்பது அம்மி கல்லுரலில்தான். என் கணவர் பலமுறை..ஏன் இப்படி கஷ்டப் படுகிறாய்? கிரைண்டரில் அரையேன்..என்பார். எனக்கு கதாகாலட்சேபமோ கச்சேரியோ கேட்டுக் கொண்டு அரைப்பது சுகமான அனுபவம்! உடலுக்கு எக்ஸர்சைஸும் ஆச்சே! விருந்தினர் வருகையின்போது மட்டுமே மிக்ஸி கிரைண்டர்!

நான் அழகாக அலங்காரம் செய்து கொள்வதில் ஆர்வமுள்ளவள் என்பதால் புடவை, நகைகள் அதுவும் imitation நகைகள் வாங்கும் ஆர்வத்தை விட முடியவில்லை!

எந்த வேலையையும் சிறப்பாக செய்ய விரும்புபவள் நான். அது கோலமோ சமையலோ வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதோ..அதை உடனிருப்பவர்கள் என் கணவர் உட்பட சற்று சரியில்லாமலோ மாற்றியோ செய்து விட்டால் சட்டென்று கோபமாகப் பேசி விடுவேன். 

என் கணவர் எனக்கு நேர்எதிர். யாரிடமும் கோபமே கொள்ளாத குணசீலர்! நான் என்ன தப்பு செய்தாலும் மிகவும் மென்மையாக எடுத்துச் சொல்வார். நான் கோபிக்கும்போது..சொல்வதை கோபிக்காமல் சொல்லேன்..என்கிறபோது எனக்கே அவரைப் பார்க்கப் பாவமாக இருக்கும்! அந்த குணத்தை சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

எந்த சாமானை எடுத்தாலும் அதே இடத்தில் திரும்ப வைக்கும் குணம் என்னிடம் கிடையாது! அடுத்த முறை அந்தப் பொருளைத் தேடும்போது என் கணவரிடமே..கொஞ்சம் தேடிக் கொடுங்கோளேன்..என்றால், தேடிக் கொண்டு வந்து தந்துவிட்டு..எடுத்ததை அதே இடத்தில் வைக்கும் குணம் எப்ப உனக்கு வருமோ?..என்பார்! நானும் வேடிக்கையாக..அடுத்த ஜன்மத்தில்..என்பேன்! 

இப்பொழுதெல்லாம் ஞாபகமாக எடுத்ததை அதே இடத்தில் வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்! வேறு எங்காவது வைத்தாலும் அந்த இடத்தை என் கணவரிடம் சொல்லி நினைவு வைத்துக் கொண்டு, நான் தேடும்போது சொல்லச் சொல்வேன்! எப்படி என் idea😉

மத்யமரில் உறுப்பினரான பிறகு லைக் வருதோ, கமெண்ட் வருதோ sunday special பதிவை போடுவது ஒரு #விட_முடியாத_பழக்கம் ஆயிடுத்து!!😄


No comments:

Post a Comment