Saturday 29 May 2021

இன்று உலக தம்பதியர் தினம்..💞💕💏

 


இன்று உலக தம்பதியர் தினம்..💞💕💏


ஒருவராய்ப் பிறந்தோம்..

இருவராய் இணைந்தோம்..

இதயத்தால் கலந்தோம்..


ஒருவருக்கொருவர் 

விட்டுக் கொடுத்து 

மனதால் இணைந்து

சின்னச் சின்ன சந்தோஷங்களையும் இணைந்து ரசித்து..


எத்தனை கஷ்டம் 

வந்தாலும் அதனை 

எதிர்நோக்கி 

வெற்றி கண்டு...


ஆசை அன்பு

நேசம் பாசம்

அனைத்திலும்

இணை பிரியாமல்..


இன்றுபோல் என்றும் இனிமையாய் வாழ

இதயம் கனிந்த 

தம்பதியர் தின நல்வாழ்த்துக்கள்!



Thursday 27 May 2021

என் வாழ்க்கை இலக்கு




நாம் பிறந்து வளரும்போது நம் வாழ்க்கையின் இலக்கு பற்றியெல்லாம் யோசிப்ப

தில்லை. நமக்கு எல்லா வசதிகளும் செய்ய நம் பெற்றோர் இருக்கிறார்கள் என்ற நிம்மதி. நானும் அப்படித்தான் படித்து முடித்தேன். கல்லூரிப் படிப்பு தேவையில்லை என்ற என் பெற்றோரின் முடிவுக்கு கட்டுப்பட்டு 18 வயதில் திருமணம். 


அப்பொழுதெல்லாம் மணியனின் பயணக் கட்டுரைகளைப் படித்து பாரிஸையும், சுவிஸ்ஸையும், லண்டனையும் வாழ்வில் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. அதெல்லாம் நடக்காது என்று மனது சொல்லும். அப்பொழு

தெல்லாம் மும்பை டில்லிக் காரர்களையே 'ஆ' வென்று வாய் பிளந்து பார்ப்போம். நான் படித்து வளர்ந்தது சென்னை

யானாலும் என் அப்பா வங்கி

யில் பிறகு சிறிய ஊர்களுக்கு மாறுதல்.என்னையே ..மெட்ராஸ் எப்படிங்க இருக்கும்? ஊருக்குள்ளயே கடல் இருக்குமாமே..என்றெல்லாம் கேட்டவர்கள் உண்டு!


என் கணவருக்கு மதுரா மாற்றல் ஆக... நீ டில்லி, ஆக்ரா தாஜ்மஹால் எல்லாம் பார்க்கலாம்...என்றார்கள். அங்கு டில்லி, ஆக்ரா, வாரணாசி, ஜெய்ப்பூர், உதய்பூர், ஹரித்வார், ரிஷிகேஷ் எல்லாம் பார்த்தபின் மீண்டும் தமிழகத்தில் பாபநாசம் (குடந்தை அருகில்) கிராமத்துக்கு மாற்றல்! 


அப்பொழுது என் இலக்கு பெண் பிள்ளைகளின் படிப்பு. அவர்களை சிறந்த படிப்பு படித்து வாழ்வில் ஒரு உயர்நிலையை அடைய வைக்க வேண்டும் என்று ஊக்கம் கொடுத்தேன். யாராவது ஒருவராவது மாநில முதலாக வரவேண்டும் என்பது  என் ஆசை. அங்கிருந்து குடந்தை, ஈரோடு, மதுரை என்று பல ஊர் பள்ளிகளில் படித்தாலும் என் மூத்தமகன் மாநில மூன்றாமிடமும் இரண்டாம் மகன் மாநில முதலிடமும் பெற்றதில் மகிழ்ச்சியடைந்தேன்.


எனக்கு மருத்துவர்களைப் பார்க்கும்போது தெய்வமாகத் தோன்றும். என் பிள்ளைகளுக்கு மருத்துவப் படிப்பில் ஆர்வமில்லாததால் என் பெண்ணை மருத்துவ

ராக்க விரும்பினேன். அவளுக்கும் ஆர்வம் இருந்து முனைந்து படித்து மருத்துவ

ரானாள்.  கடைசி மகன் இன்ஜினியர். IIT, IIMல் யாரும் படிக்கவில்லை என்ற என் ஆசை நிறைவேறியது என் கடைக்குட்டி மகனால்.  மும்பை IITயில் M.Tech படித்து லண்டனில் பணிபுரிகிறான்.


என் மூத்த மகன் பொறியியலில் மூன்று Ph.Dக்கள் பெற்று ஜெர்மனியில் பணி புரிகிறான். இரண்டாம் மகன் IIMல் இடம் கிடைக்காததால் XIMபுவனேஸ்வரில் MBA படித்து சொந்தத் தொழில் செய்கிறான்.குழந்தைகளுக்கு திருமணமாகி நவரத்தி

னங்களாய் பேரன் பேத்திகள். 


என் மகன் ஜெர்மனியில் இருப்பதால் என் பாரிஸ், சுவிஸ் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 2005ம் ஆண்டு முதல் விமானப் பயணம்! முதல் வெளிநாட்டு பயணம்! என் ஆசை நிறைவேறியது. பாரிஸின் ஈஃபில் டவரையும், சுவிஸ்ஸின் ஆல்ப்ஸ் மலையையும் கண்விரியப் பார்த்து மகிழ்ந்தேன். ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் நடந்து மகிழ்ந்தேன்! நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அழகிய நகரமான லண்டன் சென்று வந்தோம்! என் இலக்கு நிறைவேறியது! அத்துடன் என் லிஸ்ட்டில் இல்லாத பல நாடுகளும் பார்த்தாச்சு! 


காசி யாத்திரை, சார்தாம் யாத்திரை இன்னும் பல முக்கிய ஆலயங்களின் தரிசனத்தில் மெய்சிலிர்த்

தோம். ஸ்ரீ சத்ய சாய் பாபா என் குரு. புட்டபர்த்திக்கு பலமுறை தரிசனத்துக்கு சென்றிருக்

கிறேன். ஒருமுறை அங்கு சர்வீஸ் செய்ய அருள் செய்ய அவரை வேண்டினேன். சாயி பக்தையான என் தோழி அதற்கான முறைகளை செய்து என்னை சர்வீஸுக்கு அழைத்துச் சென்றாள். அதிர்ஷ்டவசமாக அங்கு சுவாமி வந்து அமர்ந்து தரிசனம் தரும் இடத்தை சுத்தம் செய்து துடைத்து பக்தர்களின் வரிசையை சரிசெய்யும் பணி. எட்டு நாட்கள் சுவாமி முன்னால் அமர்ந்து தரிசிக்கும் அற்புத பாக்யம். இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்க

வைக்கும் அனுபவம்.


எல்லா கடமைகளையும் முடித்த நிலையில் அடுத்து அழகிய தூணும் திண்ணையுமாக, தோட்டத்தில் காய்கறி பூச்செடிகளும், தென்னையும், வேப்ப மரமும் இரு பக்கம் நின்றிருக்க காவிரிக் கரையில் கிராமிய அமைப்பில் இன்றைய வசதிகளோடு ஒரு வீடு வாங்கும் ஆசையும் சமீபத்தில் நிறைவேறியது. 


என் வாழ்க்கைக்கான இலக்குகளை என்னுள் உருவாக்கிய இறைவனே அவற்றை நிறைவேற்றியும் வைத்துள்ளான் என்றே நான் நம்புகிறேன். என்றும் இறைசிந்தனையும், எல்லாம் அவனே என்ற ஆத்ம சமர்ப்பணமும் கொண்டு அவன்தாள் பணிந்து எவருக்கும் கஷ்டம் தராமல் அவன் இணையடி அடைய வேண்டும் என்பதே எங்கள் இறுதி இலக்கு🙏



Wednesday 5 May 2021

மத்யமர்_குறுங்கதை



உணர்வுகள்

காவேரியும் குமாரசாமியும் மிகவும் அந்நியோன்ய தம்பதிகள்.  அவள் கணவர் குமாரசாமி விவசாயி. நிறைய நிலங்கள் இருந்தது. உணவுக்கு பஞ்சமில்லாத வாழ்வு. சொந்தமாக ஒரு சிறிய வீடு. ஒரே பிள்ளை சுகுமார். 


அவனுக்கு சிறுவயது முதலே பிடிவாதம், கோபம் எல்லாம் உண்டு. அவன் சகவாசம் சரியில்லை. காவேரியும், குமாரசாமியும் எவ்வளவோ புத்திமதி  சொல்லியும் அவன் திருந்துவதாக இல்லை. பத்தாம் வகுப்புவரை தட்டுத் தடுமாறி தேறியவன் எப்போதும் கண்டவர்களுடன் ஊர் சுற்றுவது, சிகரெட், மது என்று பொழுதைக் கழித்தான்.


வேலைக்குப் போக வேண்டிய வயதில் வீண் பொழுது போக்கி யதோடு விலை உயர்வான உடைகள், பைக் இவற்றை வீட்டில் பிடிவாதம் செய்து வாங்கி ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு ஊரை சுற்றிக் கொண்டிருந்தான். விவசாயத்தில் அவனுக்கு சிறிதும் நாட்டமில்லை.


குமாரசாமிக்கு மகனைப் பற்றிய கவலையில் காச நோய் வந்து  உடல்நிலை மோசமாகியது. காவேரி மகனிடம் வேலைக்கு செல்லாவிட்டாலும் விவசாயம் பார்த்துக் கொள்ளும்படி கெஞ்சினாள். அவனோ எதைப் பற்றியும் கவலையின்றி ஊதாரியாகத் திரிந்தான். 


குமாரசாமி காவேரியிடம் "காவேரி பூமிதான் நமக்கு தாய். விவசாயம்தான் நம் தொழில். ஒரு காணி நிலமாவது நமக்கு சொந்தமா இருக்கணும். நம்ம பிள்ளை ஒருநாள் மனசு மாறி வந்து அதை வெச்சு விவசாயம் செய்யணும். இதான் என் ஆசை" என்றார்.


குமாரசாமியின் உடல்நிலை மோசமாக, வழியின்றி நிலத்தை விற்று வைத்தியம் செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்ததைக் கேட்டும் குடிபோதையில் இருந்த சுகுமாரை நான்குபேர் பிடித்து அழைத்து வந்து கொள்ளி போடவைத்து காரியம் செய்தார்கள்.


போதை தீர்ந்ததும் இனி சொத்துக்கள் தனக்குதான் என்பதால் சுகுமார் தன் தாயைத்  துன்புறுத்தி மீதமிருந்த நிலங்களை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டவன் எல்லாவற்

றையும் விற்று பணத்துடன் சிங்கப்பூருக்கு  செல்வதாகக் கூறிவிட்டு சென்றுவிட்டான். காவேரி எவ்வளவோ அழுதும், கெஞ்சியும் அவனைத்  தடுக்க முடியவில்லை. 


அவர்கள் வீட்டை நல்ல வேளையாக விற்காததால் காவேரி அதைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டாள். வீட்டை சுத்தம் செய்தபோது குமாரசாமியின் பெட்டியில் ஒரு பத்திரம் கிடைத்தது. அதை தெரிந்த  நண்பரிடம் காட்டி என்னவென்று கேட்டாள். அவர் அது ஒரு நிலப் பத்திரம் என்றும், குமாரசாமி இறப்பதற்கு சில நாட்கள் முன்பு  இரண்டு  ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாகவும் அது இருக்கும் இடத்தையும் சொன்னார்.


அங்கு சென்று பார்த்தவளுக்கு தன் கணவர் செய்த காரியத்தை நினைத்து கண்கலங்கியது. மகனுக்கு தெரிந்தால் இதையும் விற்றுவிடுவான் என்று சொல்லாமல் இருந்திருக்

கிறாரென்று புரிந்தது. ஆற்றுக்கு அருகிலிருந்த அந்த நிலத்தில் விவசாயம் செய்தால் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து பலன் தரும். ஆனால் தன்னால் முடியாது என்பதால் நம்பிக்கையானவர்களிடம் குத்தகைக்கு கொடுத்தாள். 


தன்னிடமிருந்த பணத்தை வைத்து வாசலில் ஒரு சிறிய பெட்டிக்கடை வைத்தாள். காலை நேரங்களில் இட்லிக்கடை வியாபாரம் நன்றாக நடந்தது. இந்த வருமானம் அவளுக்கு போதுமானதாக இருந்தது.


தன் கணவர் நினைவு வரும் நேரங்களில் அவர் எப்போதும் அமர்ந்திருக்கும் சாய்வு நாற்காலி அருகில் அமர்ந்து தன் உணர்ச்சிகளை, எண்ணங்களை அவரிடம் பேசுவதாக நினைத்து சொல்வாள். மனம் ஆறுதலடைவது போல் உணர்வாள்.


நாட்கள் ஓடின. வயது எழுபதானாலும், மகன் என்றாவது ஒருநாள் வருவான் என்ற நம்பிக்கையில் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறாள் காவேரி