உணர்வுகள்
காவேரியும் குமாரசாமியும் மிகவும் அந்நியோன்ய தம்பதிகள். அவள் கணவர் குமாரசாமி விவசாயி. நிறைய நிலங்கள் இருந்தது. உணவுக்கு பஞ்சமில்லாத வாழ்வு. சொந்தமாக ஒரு சிறிய வீடு. ஒரே பிள்ளை சுகுமார்.
அவனுக்கு சிறுவயது முதலே பிடிவாதம், கோபம் எல்லாம் உண்டு. அவன் சகவாசம் சரியில்லை. காவேரியும், குமாரசாமியும் எவ்வளவோ புத்திமதி சொல்லியும் அவன் திருந்துவதாக இல்லை. பத்தாம் வகுப்புவரை தட்டுத் தடுமாறி தேறியவன் எப்போதும் கண்டவர்களுடன் ஊர் சுற்றுவது, சிகரெட், மது என்று பொழுதைக் கழித்தான்.
வேலைக்குப் போக வேண்டிய வயதில் வீண் பொழுது போக்கி யதோடு விலை உயர்வான உடைகள், பைக் இவற்றை வீட்டில் பிடிவாதம் செய்து வாங்கி ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு ஊரை சுற்றிக் கொண்டிருந்தான். விவசாயத்தில் அவனுக்கு சிறிதும் நாட்டமில்லை.
குமாரசாமிக்கு மகனைப் பற்றிய கவலையில் காச நோய் வந்து உடல்நிலை மோசமாகியது. காவேரி மகனிடம் வேலைக்கு செல்லாவிட்டாலும் விவசாயம் பார்த்துக் கொள்ளும்படி கெஞ்சினாள். அவனோ எதைப் பற்றியும் கவலையின்றி ஊதாரியாகத் திரிந்தான்.
குமாரசாமி காவேரியிடம் "காவேரி பூமிதான் நமக்கு தாய். விவசாயம்தான் நம் தொழில். ஒரு காணி நிலமாவது நமக்கு சொந்தமா இருக்கணும். நம்ம பிள்ளை ஒருநாள் மனசு மாறி வந்து அதை வெச்சு விவசாயம் செய்யணும். இதான் என் ஆசை" என்றார்.
குமாரசாமியின் உடல்நிலை மோசமாக, வழியின்றி நிலத்தை விற்று வைத்தியம் செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்ததைக் கேட்டும் குடிபோதையில் இருந்த சுகுமாரை நான்குபேர் பிடித்து அழைத்து வந்து கொள்ளி போடவைத்து காரியம் செய்தார்கள்.
போதை தீர்ந்ததும் இனி சொத்துக்கள் தனக்குதான் என்பதால் சுகுமார் தன் தாயைத் துன்புறுத்தி மீதமிருந்த நிலங்களை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டவன் எல்லாவற்
றையும் விற்று பணத்துடன் சிங்கப்பூருக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்றுவிட்டான். காவேரி எவ்வளவோ அழுதும், கெஞ்சியும் அவனைத் தடுக்க முடியவில்லை.
அவர்கள் வீட்டை நல்ல வேளையாக விற்காததால் காவேரி அதைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டாள். வீட்டை சுத்தம் செய்தபோது குமாரசாமியின் பெட்டியில் ஒரு பத்திரம் கிடைத்தது. அதை தெரிந்த நண்பரிடம் காட்டி என்னவென்று கேட்டாள். அவர் அது ஒரு நிலப் பத்திரம் என்றும், குமாரசாமி இறப்பதற்கு சில நாட்கள் முன்பு இரண்டு ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாகவும் அது இருக்கும் இடத்தையும் சொன்னார்.
அங்கு சென்று பார்த்தவளுக்கு தன் கணவர் செய்த காரியத்தை நினைத்து கண்கலங்கியது. மகனுக்கு தெரிந்தால் இதையும் விற்றுவிடுவான் என்று சொல்லாமல் இருந்திருக்
கிறாரென்று புரிந்தது. ஆற்றுக்கு அருகிலிருந்த அந்த நிலத்தில் விவசாயம் செய்தால் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து பலன் தரும். ஆனால் தன்னால் முடியாது என்பதால் நம்பிக்கையானவர்களிடம் குத்தகைக்கு கொடுத்தாள்.
தன்னிடமிருந்த பணத்தை வைத்து வாசலில் ஒரு சிறிய பெட்டிக்கடை வைத்தாள். காலை நேரங்களில் இட்லிக்கடை வியாபாரம் நன்றாக நடந்தது. இந்த வருமானம் அவளுக்கு போதுமானதாக இருந்தது.
தன் கணவர் நினைவு வரும் நேரங்களில் அவர் எப்போதும் அமர்ந்திருக்கும் சாய்வு நாற்காலி அருகில் அமர்ந்து தன் உணர்ச்சிகளை, எண்ணங்களை அவரிடம் பேசுவதாக நினைத்து சொல்வாள். மனம் ஆறுதலடைவது போல் உணர்வாள்.
நாட்கள் ஓடின. வயது எழுபதானாலும், மகன் என்றாவது ஒருநாள் வருவான் என்ற நம்பிக்கையில் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறாள் காவேரி
No comments:
Post a Comment