Thursday 4 March 2021

கல்யாணம்_பண்ணிப்_பார்..3

கல்யாணம்_பண்ணிப்_பார்..3

கல்யாணம் பண்ணிப்பார்..2
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1620172344837240/
கல்யாணம் பண்ணிப்பார்..1
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1619434758244332/

என் மகள்
திருமணம் முடித்ததும் என் மூத்த மகனுக்கு  பெண் பார்க்க ஆரம்பித்தோம். அவன் Nanotechnologyயில் டாக்டர் பட்டம் பெற்று  ஜெர்மனியில் Max Planck instituteல் பணி புரிந்து கொண்டிருந்தான். தான்
ஒரு ரஷ்ய நாட்டுப் பெண்ணைக்  காதலிப்பதாகவும், அவளும் இவனைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாயும் சொன்னான். எனக்கு ஒரே அதிர்ச்சி. 'அதெல்லாம் சரிப்பட்டு வராது' என்று நான் மறுத்தேன். ஆனால், என் கணவரும் மற்ற பிள்ளைகளும் அவனுக்கு முழு சப்போர்ட்.

'நீ அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேசினால் மாறி விடுவாய். உன்னுடைய குணங்கள், செயல் முறைகள் எல்லாம் அவளிடமும் இருக்கிறது அம்மா! உனக்கு அவளை ரொம்பப் பிடித்துவிடும்' என்று எனக்கு ஐஸ் வைத்தான்!

அதோடு விடாமல் வெப்காமில் அவளைக் காட்டினான். பளிச்சென்று இருந்தாள். இவன் சொல்லிக் கொடுத்தபடி 'ஹலோ அம்மா! செளக்கியமா?' என்று அழகாகத் தமிழில் கேட்டாள்!

மறுத்துச் சொன்ன நானே என் கணவருடன் தாலி, புடவை சகிதம் ஜெர்மனி சென்று அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தோம்.அவளுக்கு ஆங்கிலம் சரளமாகப் பேச வராது. அதனால் என் பிள்ளை மூலம்தான் நாங்கள் இருவரும் பேசிக் கொள்வோம்! இப்பொழுது கற்றுக் கொண்டு நன்றாகப் பேசுகிறாள்.

முதல்முறை என் இரண்டாவது பிள்ளை கல்யாணத்துக்கு வந்தபோது அவள் எங்களிடம் பழகிய விதமும், அவளுடைய பண்பும், அன்பும் நல்ல பெண்தான் மருமகளாக வந்திருக்கிறாள் என்று மகிழ்ந்தேன்!

என் மகனிடம் அவள் காட்டும் பிரியமும், மரியாதையும் அவன் என்ன சொன்னாலும் உடனே செய்யும் பாங்கும், மணமாகி 15 வருடமாகியும் மாறவில்லை.

சென்ற ஆண்டு இங்கு வந்தபோது எங்கள் குலதெய்வ ஆலயத்திற்கு குடந்தை அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றிருந்தோம். எங்கள்
உறவினர்களுடன் அன்பாகப்
பழகி என் பிள்ளையுடன் சேர்ந்து நமஸ்காரம் செய்து மரியாதையோடு நடந்து கொண்டதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியமாகி
விட்டனர்.

அடுத்த மகனுக்கு பெண் தேடும் முன்பு ..நீ யாரையாவது லவ் பண்ணினா சொல்லு..என்றோம். நீயே பார் என்றதும் பார்க்க ஆரம்பித்தோம். இப்பவும் ஆயில்யம் வேண்டாம், மூத்தபிள்ளை வெளிநாட்டுப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டிருப்பதால் வேண்டாம் என்பவர்கள் இருப்பது வேடிக்கையாக இருந்தது!

இதையெல்லாம் பெரிது படுத்தாமல் நல்ல குடும்பம், படிப்பு, வேலை என்று பெண் வீட்டாரால் பாராட்டப்பட்டு என் பிள்ளைக்கு கிடைத்த மிக அருமையான மாட்டுப்பெண் இவள்! நாங்கள் எதுவும் அவர்களிடம் கேட்க
வில்லை. அவர்கள் விருப்பப்படி செய்த சீருடன் வந்தவள், எங்கள் பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொண்டு ஒன்றி வாழ்பவள்! இசை, நடனம் இவற்றில் ஆர்வம் உள்ளவள். இந்தமுறை திரு அனந்து அவர்களின் மார்கழி வைபவத்தில் மூன்று திருப்பாவைக்கு நடனம் ஆடியுள்ளாள்.

என் கடைசி பிள்ளை சிங்கப்பூரில் வேலையில் இருந்தான். என் மூன்றாம் மருமகள் அயர்லாந்து பெண். பெரிய பிள்ளை வெப்காமில் காட்டி பெண் எப்படி என்றான்! இவனோ சென்னைக்கு வீட்டிற்கே அவளை அழைத்து வந்து அறிமுகப் படுத்தினான்!

அவள் Engineer  மற்றும் Physiotherapist. அவளுக்கு தமிழ்த் தோழிகள் நிறைய உண்டு. இரண்டு முறை இந்தியாவிற்கு வந்தவளுக்கு இந்தியாவோடு ஒரு இந்தியன் மீதும் காதல் வந்து விட்டதாக சொன்னாள்! முதல்முறை வந்தபோதே எங்கள் எல்லோருடனும் மிக சகஜமாக பேசி பழகியதுடன் வற்றல்குழம்பு, உருளை ரோஸ்ட் எல்லாம் ரசித்து சாப்பிட்டாள்! சிங்கப்பூரில் திருமணம் நடந்தது. தற்போது லண்டனில் இருக்கிறார்கள்.

நம் குழந்தைகள் நம்மிடமிருந்து வந்தவர்கள். அதனால் அவர்கள் நம் இஷ்டப்படி நடக்க வேண்டும் என நாம் நினைப்பது தவறு.  ஒவ்வொருவருக்கும் தனியான எண்ணங்கள் ஆசைகள் உண்டு. அவர்கள் வாழ்க்கையை அவர்களே தீர்மானிப்பதில் தவறு என்ன?

எல்லா மனிதர்களிடமும் தனிப்பட்ட சிறப்பான குணங்கள் உண்டு. அதில் ஈர்ப்பு ஏற்படும் போதுதானே இருவருக்குள் காதல் ஏற்படுகிறது. ஒருவருக்
கொருவர் குறை கூறிக் கொள்ளாமல், சந்தோஷமோ, துக்கமோ இருவரும் இணைந்து அதனை அனுபவிப்போம் என்ற எண்ணம் இருந்தாலே காலம் முழுதும் இணைந்து இன்பமாக வாழ முடியும்.

நாமெல்லாம் கணவன்/மனைவி வேறுபட்ட எண்ணங்களோடு இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தோம்/வாழ்கிறோம். இன்றைய இளைய தலைமுறை அப்படி இல்லை.நிறைய யோசித்து முடிவெடுத்து சிறப்பாகவும் வாழ்கிறார்கள். நாம் அந்த நாளைய விஷயங்களைக் கூறி அதன்படி அவர்களை நடக்கச் சொல்வதால் நமக்குள் மனவேற்றுமைதான் வரும்.

வாழ்க்கை வாழ்வது ஒருமுறை. அதை தம் விருப்பத்திற்கு சந்தோஷமாக வாழ ஆசைப்
படுகிறார்கள். இதில் என்ன தவறு? பெரியவர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணங்களே இன்று டைவர்ஸில் முடிகிறதே.

'உனக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை' என்று சுலபமாக சொல்லிவிடலாம். இன்று நமக்கு ஆதரவாகப் பேசும் உறவும் நட்பும் நாளை நமக்கு கஷ்டம் வரும்போது கண்டுகொள்ள மாட்டார்கள்.

என் பிள்ளைகள் காதலித்த
போதும் நாங்கள் இதையெல்லாம் யோசித்தோம். அவர்களுக்கும் எடுத்துச் சொன்னோம். அவர்கள் உறுதியாக இருந்ததாலேயே திருமணத்திற்கு சம்மதித்தோம். இன்றுவரை அவர்கள் எங்களுடன் பாசமாக இருப்பதுடன், அவர்களும் ஒருவருக்கொருவர் அன்யோன்யமாய் வாழ்வதும் சந்தோஷமாக இருக்கிறது.

இன்று கூட்டுக் குடும்பங்கள் சாத்தியம் இல்லை.
இக்காலத்தில் அவரவர் வாழ்க்கையை தம் இஷ்டப்படி வாழவே அனைவரும் விரும்புகின்றனர். வீட்டுப் பெரியவர்களின் அறிவுரைகளும், வாழ்க்கை அனுபவங்களையும் இந்தத் தலைமுறையினர் கேட்டு நடக்க விரும்புவதில்லை. இன்றும் சில கூட்டுக்குடும்பங்கள் சிறப்பாக வாழ்வது பாராட்டத் தக்கது.

பெரும்பாலான  இளைய தலைமுறையினர் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். இங்கிருக்கும் பெரியவர்களும் வேலை ஓய்வு பெற்றபின் பொறுப்புகளி
லிருந்து விலகி அவரவர் விருப்பப்படி வாழ ஆசைப்படுகிறார்கள். இன்று Senior Citizen Homes அதிகமாயிருப்பதன் காரணம் இதுதான். நாம் சம்பாதிக்கும் காலத்திலேயே நமக்காக என்று பணத்தை சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. வயது முதிர்ந்தபின் குழந்தைகளை எதிர்பார்த்து இருக்க வேண்டாம்.

நாங்களும் என் இரண்டாவது பிள்ளையுடன் இருந்தோம். பெண், பிள்ளைகளுக்கு குழந்தைகள் பிறந்தபோது அங்கு சென்று தேவையான உதவிகள் செய்தோம். எல்லா கடமைகளும் முடித்த நிலையில் நமக்கென்று பூஜை ஆலயதரிசனம் என்ற ஒரு  வாழ்க்கை தேவை என்று தோன்ற, கடந்த எட்டு வருடங்களாக தனிக்
குடித்தனம்! எங்கள் எண்ணம் புரிந்து என் மகன் எங்களை தனித்து வாழ அனுமதித்தான். என் மருமகள்தான் ரொம்ப வருத்தப் பட்டாள்.

அவ்வப்போது பெண் பிள்ளைகள் இருக்கும் ஊருக்கு சென்று தங்கிவிட்டு வருவோம். இதனால் நமக்கும் குழந்தைகளுக்குமான நெருக்கம் அதிகமாகிறது. முக்கியமாக பேரன் பேத்திகள் நம்மோடு இருந்து மகிழ ஆசைப்படுகிறார்கள். இரண்டு மாதமானால்...எப்ப இங்க வருவாய் தாத்தா...என்று கூப்பிடுகிறார்கள்.

இப்பொழுது நாங்கள் குடந்தையில் இருக்கிறோம். காவிரிக் கரையோரம் அக்ரஹார டைப்பில் தூணும் திண்ணையுமாக தனித்தனி வீடுகள். சுத்தமான காற்று. மாசில்லாத சுகமான வாழ்க்கை! அமைதியான சுற்றுப்புற சூழ்நிலை!

சென்ற ஆகஸ்ட்டில் கிரகப்பிரவேசத்திற்கு வந்த என் மகன் இங்குதான் இருக்கிறான். பேத்திகளுக்கு பள்ளி திறந்தபின் இங்கிருந்து சென்னை போகணுமே என்ற வருத்தம்! நான் onlineல் படித்துக் கொண்டு இங்கேயே இருந்து விடுகிறேன் என்கிறாள் பெரிய பேத்தி!

நம் பிள்ளைகளை அவர்கள் குடும்பம் அவர்கள் பொறுப்பு என்று தள்ளி இருந்து பார்த்து சந்தோஷப்படுவதுடன், அவர்கள் கேட்டால் மட்டுமே தேவையான விஷயங்களைப் பற்றி சொல்வது நமக்கும் மரியாதை..அவர்களுக்கும் மகிழ்ச்சி.

No comments:

Post a Comment