Sunday 28 June 2020

கார்த்திகை தீபப் பெருநாள்🔥..(7.12.'19)


கார்த்திகை தீபப் பெருநாள்🔥
ஆடி மாதம் பிறந்தாலே வரிசையாக பண்டிகைகள்தான். அதிலும் நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை ஆகிய மூன்று பெரிய பண்டிகைகளும் அடுத்தடுத்து வந்து விடும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் உற்சாகமும், மகிழ்ச்சியையும் தருவன இப்பண்டிகைகள்.

கார்த்திகை மாதம் முதல் நாளிலிருந்து மாதம் முடியும் வரை தினமும் மாலையில் விளக்கேற்ற வேண்டும். சிவஜோதியை யோக வழியால் காண முடியாதவர்கள் திருவிளக்கிட்ட தொண்டுகளால் காணலாம் என்பதை உணர்த்துவதே கார்த்திகை தீபம்.

இத்தீப வழிபாடு எல்லா ஜாதியினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. கலிய நாயனார், கணம்புல்ல நாயனார் ஆகியோர் திருவிளக்குத் தொண்டால் முக்தி பெற்றனர். காஞ்சீபுரத்தில் தீபப் பிரகாசர் விளக்கொளி பெருமாள் என்ற பெயரில் திருமால் ஆலயம் உள்ளது.

அக்னி அருவமாகவும், உருவமாயும் விளங்குவது போல சிவபெருமானும் விளங்குகிறார். ‘நமசிவாய’ மந்திரமே ஒளி மயமானது. ‘சுஷ்கப்பன்’ என்ற சிவபெருமான் நாமமே, சொக்கப்பன் என்றாகி, பனை மரத்து கட்டையாலும், பனை ஓலையாலும் கார்த்திகை தீபத்தன்று ‘சொக்கப்பனை’ கொளுத்தும் வழக்கம் ஆலயங்களில் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சிவனுடைய ஜோதியை நினைவூட்டவே, எல்லா சிவாலயங்களிலும் இப்பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப் பெறுகிறது.

அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையிலுள்ள ‘தேஜோலிங்கம்’ எனும் மலை உச்சியில் ஒரு பெரிய கொப்பரையில், இருபத்தி நான்கு முழ துணியில் கற்பூரத் தூளைத் தடவி திரியாக்கி, கொப்பரையில் நெய் விட்டு ஊற வைப்பார்கள். மாலையில் சுவாமி புறப்பாடாகி ஆலயம் விட்டு வெளிவந்து மலையை நோக்கி நின்று தீபாராதனை எடுத்ததும் ஜோதி ஏற்றப்படும்.

விளக்கு இருளை விலக்குவது போல் அஞ்ஞான இருளை விலக்குவது ஜோதி. முற்காலத்தில் அகல் என்ற மண் விளக்குகளையே உபயோகிப்பர். அகல், எண்ணெய், திரி, சுடர் நான்கும் சேர்ந்ததே விளக்கு. இவை அறம் பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருள்களையும் குறிப்பது. விளக்கேற்றி வழிபட்டால் நம் அறிவாகிய விளக்கு சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.

கார்த்திகை அன்று அப்பம், பொரி இவற்றை நிவேதனம் செய்கிறோம். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அப்பத்தில் நீர்ச் சத்துள்ளவரை நெய்யில் மேலும் கீழும் செல்லும். நீர்ப்பகுதி வற்றிவிட்டால் அப்பம் மேலே மிதக்கும். இதைப் போல் ஞானம் பரிபூர்ணமாக ஏற்படும் வரை அகங்காரம் பிடித்த மனம் சலனமடையும். ஞானம் கைகூடி விட்டால் அப்பம் நெய்யில் மிதப்பது போல் ஆன்மா ஞானம் பெற்று சலனமற்று சாந்தியடையும்.

நெல்லிலிருந்து பொரி கிடைக்கிறது. நெல்லை மீண்டும் பூமியில் விளைத்தால், அது மீண்டும் முளைக்கும். நெல்லை வறுத்து பொரியாக்கி விட்டால் மீண்டும் முளைக்காது. அது போல் மனமாகிய நெல்லை ஞானமாகிய பொரியாக்கி விட்டால் மீண்டும் பிறப்பு என்ற பேதமை நிகழாது.

விளக்குகளுக்கு இலுப்பெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு ஏற்றுவதே நல்லது. வெள்ளி, வெண்கலம், பீங்கான் என்று பல விளக்குகளை ஏற்றினாலும், மண் அகல் விளக்குகளில் ஏற்றுவதே மிகவும் நல்லது.

இன்றும் சாஸ்திரத்திற்காக
வென்று இரண்டு அகல்களை கார்த்திகை தீபம் அன்று புதிதாக வாங்கும் வழக்கம் பல வீடுகளிலும் உண்டு. எவர்சில்வர் விளக்கு
களை உபயோகப் படுத்துவது நல்லதல்ல.

கார்த்திகை தீபங்களை ஏற்றும் போது கீழுள்ள சுலோகங்களை சொல்லிக் கொண்டே ஏற்றினால் சர்வ நன்மைகளும் ஏற்படும்.

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே சதா

ஸர்வமங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே

சுபம் பவது கல்யாணி ஆயுராரோக்ய சம்பதாம்
மம துக்க விநாசாய தீபஜ்யோதி நமோஸ்துதே

கீடா பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா|
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா |
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா|
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா||

'புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மனிதர்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் எவரானாலும் எதுவானாலும் இந்த தீப ஒளியைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் நீங்கி, இன்னொரு ஜன்மா எடுக்காமல் இறைவனுடன் சேரட்டும்' என்று இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம்.

தீபத்தின் ஒளி எப்படி வித்யாஸம் பார்க்காமல்,  மனிதர் முதல் எறும்பு போன்ற ஊர்வன வரை எல்லார் மீதும் வித்யாசமின்றி படுவது போல நம் மனிலிருந்து அன்பு ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாகப் பிரகாசிக்க வேண்டும். இப்படிப்பட்ட அகவொளியோடு, புற ஒளியாக தீபத்தை ஏற்றி மேலே சொன்னது போல் ப்ரார்த்திக்க வேண்டும்.

அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!




No comments:

Post a Comment