Wednesday 10 June 2020

மார்கழி சிறப்பு🙏🏻..(9.1.2020)

மார்கழி சிறப்பு🙏🏻
உலகில்  இசையே நம்மை நாடு, இனம், மதம், சாதி போன்றவைகளைக் கடந்து நம்மை இணைக்கிறது.மழைக்கு ஒரு காலம்..மலர்கள் பூக்கவும் பயிர்கள் விளையவும்  ஒரு பருவம்..
கொட்டும் பனிக்கும்  காற்றுக்கும்
மழைக்கும்  என்று ஒரு காலம்..
அது போல, இசைக்கு என்று இருப்பதே மார்கழி மாதம்!

இசை கச்சேரிகள் ஆரம்பித்ததன் இன்னொரு காரணம் என்ன  தெரியுமா? சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் டிசம்பர்,ஜனவரி மாதங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை கொண்டாட தங்கள் நாட்டுக்குச் செல்வர். அப்போது, இங்கே விடுதலை போராட்டங்கள் நடந்தால் யார் தடுப்பது என்று யோசித்தனர்.

நம் மக்களை  வசப்படுத்தக் கூடிய சக்தி இசைக்கு இருப்பதை உணர்ந்து டிசம்பர் மாதத்தில் நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்க, தங்களுக்கு ஆதரவாக இருந்த தமிழர்கள் மூலம் இசை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தனர். டிசம்பரில்  இசை நிகழ்ச்சி உருவானதற்கு இதுவும் ஒரு காரணமாம்!

இசைக் கச்சேரி என்றதும் நம் நினைவுக்கு வருவது கச்சேரி செய்யும் வித்வாம்சினிகளும் கேட்க வரும் பெண் ரசிகர்களும் அணிந்து வரும் பட்டுப் புடவை
களும் அலங்காரங்களும்! பூக்கள் விலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அவர்கள் தலையில் குறைந்தபட்சம் நான்கு முழம் பூ இருக்கும்!

'மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்' என்று ஆண்டாள் பாடிய திருப்பாவை சற்றே மறக்கப்பட்டு, இந்நாட்களில் அலங்காரங்களுக்கு ஏற்ற மாதமாக மார்கழி மாறி
விட்டது!  விதவிதமான வண்ணப் புடவைகளிலும் அதற்குப் பொருத்தமான நகைகளிலும் வித்வாம்சினிகள் மின்ன..பக்க வாத்தியம் வாசிக்கும் ஆண்களும் 'நாங்கள் மட்டும் குறைவா?' என்பதுபோல் அவர்களின் புடவைக்கு மேட்சாக பலப்பல கலர்களில் பளபள சட்டைகள் அணிந்து வருவதும் பழக்கமாகி விட்டது!

அத்துடன் ஒவ்வொரு சபாவிலும் விதவிதமான புதுவகை
சிற்றுண்டிகள்..காதுக்கு இனிய இசை..மனதில் இறை சிந்தனை..வயிற்றுக்கும் வித்யாசமான உணவு என்று ரசிகர்களைக் கவர்ந்து மனதில் மகிழ்ச்சி தரும் மார்கழியைப் போற்றுவோம்!

திருப்பாவை..24
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

திருப்பள்ளியெழுச்சி..4
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

#இன்றையகோலம்
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் 🙏
#நிவேதனம்
மல்டி ரவா பொங்கல்..நெல்லிக்காய் ஊறுகாய்







No comments:

Post a Comment