மார்கழி சிறப்பு🙏
கோலம் என்பதற்கு அழகு என்று பொருள். கற்பனை வளத்தை அதிகரிக்க கோலம் போடுவது உதவும். வாசலில் சூர்யோத
யத்திற்கு முன்பு கோலமிடல் வேண்டும். இழையை இடப்புறமாக இழுக்கக் கூடாது.கோலத்தைக் காலால் அழிக்கக் கூடாது. வாயிற் படிகளில் குறுக்குக் கோடுகள் போடக் கூடாது. நேர்கோடுகளே போட வேண்டும். இரட்டை இழைக் கோலமே போட வேண்டும்.
விசேஷ நாட்களில் அரிசியை அரைத்த மாவினால் இழைக் கோலம் போடுவது நல்லது. கண்டிப்பாக சுற்றிலும் காவியிடுவதும் அவசியம். குழந்தை பிறந்தாலும், பெண்கள் பருவம் அடைந்தாலும் அந்த மகிழ்ச்சியை தெரிவிக்க இரவானாலும் கோலமிட வேண்டும். அமாவாசை
மற்றும் முன்னோர் காரியங்கள் செய்யும் தினங்களில் மட்டுமே வாசலில் கோலம் போடக் கூடாது.
நகரங்களிலோ இன்று ஸ்டிக்கர் கோலங்களே பல வீடுகளுக்கு முன் காட்சி அளிக்கின்றன.
தினமும் கோலம் போட முடியாவிடினும் விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களிலாவது அழகிய கோலங்களை இட்டு கோலக்கலை அழியாமல் காப்பாற்ற முயற்சிப்போம்.
இன்றைய பாசுரங்களும்..கோலமும்🙏
திருப்பாவை..20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.
திருவெம்பாவை..20
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.
No comments:
Post a Comment