தவற விட்ட தருணங்களைத் தேடித் தேடிப் பார்த்தும்..ம்ஹும்..எதுவும் கிட்டவில்லை..எழுதவும் எட்டவில்லை!
என் சிறு வயது முதலே நான் எதற்கும் ஆசைப் பட்டதில்லை..என் பெற்றோர் வளர்த்த விதத்தில் எல்லாமே அவ்வப்பொழுது கிடைத்தது..!
குறைவில்லாத குறையில்லாத வாழ்வு அன்றும் இன்றும்..!
பள்ளியிறுதி முடித்ததும் கல்லூரி செல்லும் ஆசை மனதின் ஓரமாக..!
அம்மா அப்பாவுக்கோ அது தேவையில்லை என்று பட்டதால் நானும் ஏற்றுக் கொண்டேன்..!
18 வயதில் திருமணம் செய்து கடமையை முடிக்கும் ஆசை அப்பாவுக்கு..
அது தவறென்று எனக்கு தோன்றாததால் அவர்கள் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை என் கணவரானார்..!
அன்பான ஆசையான கணவரின் விருப்பங்களை என் விருப்பங்களாக மாற்றிக் கொள்ள இன்று அவர் என் வசம்..!
அம்மாவாக இருப்பார் என்று நான் கற்பனை செய்திருந்த என் மாமியார் ஒரிஜினல் மாமியாராக இருந்தபோது (நான்தான் தப்புக் கணக்கு போட்டு விட்டேனோ!) அதை ஏற்றுக் கொண்டு அவர் கோபித்தாலும் நான் வாய்மூடி இருக்கப் பழகினேன்..!
அதன் பலனாக பல நல்ல விஷயங்கள் சமையல் வீட்டு நிர்வாகத்தில் தேர்ச்சி பெற்றேன்..!
அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து அவர்கள் வளரும்போது எழுத்து பாட்டு தையல் கைவேலைகள் இவற்றில் என் திறமைகளையும் வளர்த்துக் கொண்டேன்..!
ஒவ்வொருவரும் சிறப்பான துறைகளில் மேன்மையடைய நான் அளவிலா பெருமையடைந்தேன்..!
இன்று அவர்கள் திருமணம் முடித்து பேரன் பேத்திகளோடு என் சந்தோஷமான நேரங்களைத் தவற விடுவதில்லை..!
ஒரு வெளிநாடாவது பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்ட நான் பல நாடுகளும் சுற்றிக் கொண்டிருக்கிறேன்..!
எனக்குக் கிடைத்த எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்வை இயல்பாக இறைவன் கொடுத்த வரமாக எண்ணி வாழும்போது என் எந்தத் தருணமும் தவற விடவில்லை என்று மனமகிழ்ச்சி கொள்கிறேன்..!
ஒவ்வொரு கணமும் இந்த இனிமையான வாழ்வுக்காக நான் இறைவனுக்கு சொல்லும் நன்றிகள் கணக்கற்றவை..!
நான் தூங்கும்போதும் அவ்வப்போது வேறு எண்ணங்களில் மூழ்கியும் அந்த ஈசனை எண்ணாத நேரங்களே நான் #தவற_விட்ட_தருணங்கள்..!
இந்த வாழ்வு இறுதிவரை தொடர இறையருளை வேண்டுகிறேன்🙏🏼
No comments:
Post a Comment