Sunday 16 August 2020

அஜா ஏகாதசி..(15.8.2020)


மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணுவை வணங்கி வழிபடும் விரதங்களில் முதன்மையானது ஏகாதசி விரதம். இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அரசர்கள் செய்யும் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு ஏகாதசியும் தனித்தனி பலன்களை நமக்கு அருள வல்லது. நம் முன்வினைகளைப் போக்கி நல்வினைகளைத் தரக் கூடியது. நம் துன்பங்களின் காரணமான முன்வினைகளை. நீக்கி, இப்பிறப்பில் நாம் நலமுடன் வாழ அருள்வது ஏகாதசி விரதம். அத்தகையதொரு ஏகாதசி விரதம் இன்றைய அஜா அல்லது அன்னதா ஏகாதசி.

அஜா ஏகாதசி விரதத்தின் பெருமைகளைத் தமக்கு விளக்கி அருளுமாறு யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணனிடம் கேட்க பகவான் எடுத்துரைக்கிறார்.

'தர்ம புத்திரரே, அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். பொதுவாக விரத முறைகள் வழிபாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த அஜா ஏகாதசி அன்று வெறும் உபவாசம் இருந்தாலே முழு விரத முறையையும் கடைப்பிடித்த பலன்களைப் பெறுவார்கள். 
ரகுவம்சத்தில் தோன்றிய ஹரிச்சந்திரன் இந்த விரதத்தை அனுஷ்டித்து தன் துன்பம் நீங்கப் பெற்றான்' என்றுரைத்தார்.

உலகம் போற்றும் சத்தியசந்தனாக விளங்கிய ஹரிச்சந்திர மகாராஜா தன் முன்வினைப்பயன்களால் தன் நாட்டை இழந்தான். மேலும் தன் மனைவி, மகனையும் பிரியும் நிலை வந்தது. ஆனாலும் தன் இயல்பில் மாறாது சுடுகாட்டைக் காக்கும் வேலையைச் செய்து சத்தியத்தையே கடைப்பிடித்து
வந்தான்.

ஒருநாள் ரிஷி கௌதமரை சந்தித்து அவர் பாதங்களைப் பணிந்த ஹரிச்சந்திரன் தன் வாழ்க்கையில் நடந்த துயரங்களை எடுத்துக்கூறினான்.

அவற்றைக் கேட்ட முனிவர் மிகவும் மனம் வருந்தி, 'நாம் படும் துன்பத்தின் காரணம் முன்வினைப்பயன்தான். அதை அழிக்கும் சக்தியுடைய விரதம் அஜா ஏகாதசி விரதம். அந்த நாளில் நீ முழு உபவாசம் இருந்து, ஹரியை நாள்முழுவதும் மனதாலும் வாக்காலும் சிரத்தையுடன் துதித்தால் ஹரி மகிழ்ந்து உன் வினைப்பயன்களை நீக்குவார். மேலும் நீ விரைவில் நன்னிலை அடைவாய். நீ அடையும் நன்னிலையே இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும்' என்று உபதேசித்தார்.

ஹரிச்சந்திரனும் அதன்படி விரதமிருந்து உபவாசம் அனுஷ்டிக்க விரைவில் அவன் வினைப்பயன்கள் நீங்கின. அவனோடு வாதம் செய்தவர் தோற்றார். அவன் துன்பங்கள் யாவும் நீங்கின. தன் பிள்ளையோடும் மனைவியோடும் இணைந்தான். அவன் ராஜ்ஜியம் மீண்டது என்று பகவான் கிருஷ்ணர் அவற்றை எடுத்துரைத்தார்.

அதோடு அவர் யுதிஷ்டிரனிடம், 'ஓ பாண்டு புத்ரா! நீயும் இப்போது இந்த அஜா ஏகாதசியின் சிறப்புகளை அறிந்து கொள்!' எனக் கூறத் தொடங்கினார். இந்நாளில் மேற்கொள்ளும் விரதம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவால் இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களை உடனடியாக நீக்க வல்லது. இதனால் அவர்கள் அனைவரும் இறுதியில் வைகுண்டலோகத்தை அடைவர்.

'எவரொருவர், இந்நாளில் இந்த விரதத்தின் மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை கேட்பவர் சொல்பவர் படிப்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்' என ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறியதாக  பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்
கின்றது.

இத்தகைய சிறப்புகளை
உடைய இந்த நாளில் உபவாசம் இருந்து ஹரியை வழிபட வேண்டும். பொதுவாகவே சனிக்கிழமைகள் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. சனிக்கிழமையும் ஏகாதசியும் இணைந்துவருவது மிகவும் சிறப்புக்குரியது. எனவே இந்த நாளைத் தவறவிடாமல் பகவான் விஷ்ணுவை வழிபட்டு சகல நலன்களையும் பெறுவோம்.





No comments:

Post a Comment