Wednesday 5 August 2020

படம்பார்த்து கவிதை..(23.7.2020)



கண்ணா..கார்முகில் வண்ணா..
உனை எண்ணாத நாளில்லை..உன் நினைவின்றி நானில்லை..

உன் தித்திக்கும் முத்தங்களில்
நான் என்னை மறந்தேன்..
என் சித்தத்தில் உனை வைத்து
சிந்திக்க மறந்தேன்..

உன் காதலை எண்ணி
பிரிவாலே பித்தாகினேன்..
குழலோசை கேட்காமல் துவண்டு விட்டேன்..

உன் மடியில் நானிருக்க..
என் இதழில் உன் அதரம்..
கண்ணுக்குள் காதலுடன்..
கைவிரலால் மெய் தீண்ட..
காதலால் எனையாண்ட.. மோகநாட்களை மறந்து
எனை தாபத்தில் தவிக்கவிட்டு
ஒரு மொழியும் பேசாமல்
என்னிரு விழியும் கலங்கி நிற்க
எனை மறந்ததேனோ..

காற்றோடு காதல் பேசி
மூச்சோடு கலந்த நான்
தனிமரமாய் நின்றிருக்க
தாங்கிப் பிடிக்க நீயில்லை..

காதல் மயக்கத்தில் நான் தள்ளாட
மார்போடணைக்க உன் கரமில்லை..
என் கனவெல்லாம் கானலாக்கி
அதை உணராமல் சென்றிட்டாய்..

கண்ணின் மணியென்றாய்..
என் புன்னகை  அழகென்றாய்..
நானே உன் ராணியென்றாய்..
உன் உலகமே நானென்றாய்..
அத்தனையும் பொய்யாக்கி
பரிதவிக்க வைத்து விட்டாய்..

சிலிர்ப்பு உண்டு..சுவாசமில்லை
மஞ்சம் உண்டு..மாதவன் இல்லை
வேதனையுண்டு..ஆறுதல்இல்லை
நானுண்டு..நீயில்லை கண்ணா..

கள்ளம் புரிந்து காதலோடு சிரித்து
எனை மனம் சிலிர்க்க வைத்து
தாகத்தோடு எனைத் தழுவிய
காலங்கள் காணாமல் போனதே..

இணைந்தேன் உன் இதயக்கூட்டில்
மறந்தேன் எனையே நான்..
உன் குழலோசை கேட்கும் நாளுக்காய் காத்திருக்கிறேன்..

(நீரில் தன் பிம்பம் பார்க்க குனிந்த ராதை  அதில் கண்ணன் உருவம் கண்டாள்..
முத்தத்தில் சித்தம் வைத்து பித்தான ராதாராணி கண்ணனை பிம்பமாகக் கண்டு ஞானம் பெற்றாள்..)

நீரில் தெரியும் பிம்பமும்
நின்னையே காட்டுதய்யா..
நாமிருவரும் ஒன்றென்று உரைத்ததை உணர வைத்தாய்..

ராதே ராதே என்று சுற்றிவந்து
எனை பேதையாக்கிய மாதவா
நீயே நான்..நானே நீ
என்பதை மறந்து போனேன்..

நீ பரமாத்மா..
நான் ஜீவாத்மா..
இவற்றின் ஐக்கியமே
வாழ்வின் இறுதிநிலை..
நம் தோற்றம் இரண்டு..
தோன்றல் ஒன்றே..

நீயும் நானும் இருவராய் வாழ்ந்தோம்..
இனி ஒருவராய் இணைவோம்..
குழலில் தோன்றும் இசை போல
உன்னுடன் இணைந்த ராதை நான்..

உன் தோற்றமும் வெற்றியும்
துயரும் உயிரும் நானே..
என் அதரத்தில் நீயும்
உன் விழிகளில் நானும் ஒன்றாவோம்..

அஞ்ஞானம் மறைந்து
ஞானம் பெற்றேன்..
என்னை உணர்ந்தேன்..
உன்னை அறிந்தேன்..

இனி எங்கும் என்றும்
நம் பெயர் இணைந்தே
இனிமையாய் ஒலிக்கட்டும்..
'என்னை நீ பிரிவதில்லை,
நான் உன் பிரிய சகி'
என்பதை அகிலம் உணர
எங்கும் நம் திருமணம்
வையகம் இருக்கும் வரை
'ராதா கல்யாணமாக' நிகழட்டும்..
ராதே கிருஷ்ணா🙏🏼

No comments:

Post a Comment